விபத்து நடந்த நல்லமலாவில் ரெட்டிக்கு நினைவுசின்னம்
ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி கடந்த 2ம் தேதி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.
ராஜீவ் ஆரோக்கியஸ்ரீ திட்டம், வேலை வாய்ப்பு திட்டம், வறுமை ஒழிப்பு திட்டம், வீடு கட்டும் திட்டம், சுயதொழில் கடன் உதவி, முதியோர் பென்சன், ரூ.2-க்கு கிலோ அரிசி போன்ற நலத்திட்டங்களால் பயனடைந்த மக்கள் பலர் அதிர்ச்சியால் மரணமடைந்தனர். பலர் தற்கொலை செய்துகொண்டனர். இதுவரை சுமார் 500 பேர் பலியாகியிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், அவர் பலியான நல்லமலா காட்டு பகுதியில் அவருக்கு நினைவு சின்னம் எழுப்ப வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது.
இது குறித்து ஆந்திர சுற்றுலா துறை அமைச்சர் கீதா ரெட்டி நிருபர்களிடம் கூறுகையில்,
மக்களி்ன் உண்மை தலைவராக திகழ்ந்த ராஜசேகர ரெட்டியின் மரணம் ஆந்திராவை நிலை குலையச் செய்துவிட்டது. அவரது கனவுகளையும், லட்சியங்களையும் நிறைவேற்ற வேண்டியது ஆந்திர அரசின் கடமை.
அவர் விபத்தில் மரணமடைந்த நல்லமலா காட்டு பகுதிக்குள் விரைவில் நினைவுச்சின்னம் பிரமாண்டமாக அமைக்கப்படும். அவரது நினைவுச்சின்னத்தை பார்வையிட மக்களுக்கு போதுமான சாலை வசதிகள் செய்து கொடுக்கப்படும்.
ஹைதராபாத்தில் உள்ள புலிவெந்துலா பகுதியில் இருக்கும் அவரது சமாதியிலும் நினைவிடம் அமைக்கப்படும் என்றார்.
பிரேத பரிசோதனை போலீசிடம் ஒப்படைப்பு...
இந்நிலையில் விபத்தில் பலியான ராஜசேகர ரெட்டி உள்ளிட்ட ஐந்து பேரின் பிரேத பரிசோதனை அறிக்கையை மருத்துவர்கள், கர்னூல் மாவட்ட போலீஸிடம் ஒப்படைத்துள்ளனர்.
இது குறித்து கர்னூல் மாவ்டட எஸ்பி ஸ்ரீகாந்த் கூறுகையில், பிரேத பரிசோதனை அறிக்கை சீல் வைத்து எங்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் என்ன இருக்கிறது என்பது தெரியிவில்லை என்றார்.
இந்த அறிக்கை வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி மற்றும் விமான போக்குவரத்து துறையினரிடம் (டிஜிசிஏ) ஒப்படைக்கப்பட இருக்கிறது.