ஸ்வைன்:பெங்களூரில் 2 பேர் பலி-இந்தியாவில் 131 ஆக உயர்வு
பெங்களூர்: பன்றி காய்ச்சலுக்கு பெங்களூரை சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட இந்தியா முழுவதும் 6 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து இந்தியாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 131 ஆக உயர்ந்துள்ளது.
பன்றி காய்ச்சல் நோய் இந்தியாவில் தொடர்ந்து வேகமாக பரவி வருகிறது. நேற்று முன்தினம் வரை இந்த நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 125 ஆக இருந்தது.
இந்நிலையில் நேற்று கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் இருவர் இறந்துள்ளனர். கடந்த நான்கு நாட்களுக்கு முன் மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 5 மாத கர்ப்பிணி ஒருவர் சிகிச்சை பலனளிக்காமல் பலியாகியுள்ளார். அவருக்கு வயது 29 என தெரிகிறது.
மேலும், சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டு, கடந்த 4ம் தேதி இரவு தனியார் மருத்துவமனையில் பலியான 24 வயது பெங்களூர் பெண்ணும் பன்றி காய்ச்சலால் இறந்ததாக கர்நாடக சுகாதார துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். தற்போது கர்நாடகாவில் இந்த நோயின் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் மூன்று பேர் இந்த காய்ச்சலுக்கு பலியாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவர்களின் பெயர், ஊர் போன்றவை வெளியிடப்படவில்லை. இதையடுத்து மகாராஷ்டிராவில் பலியானவர்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளது.
இந்த இரு மாநிலங்களை தவிர்த்து குஜராத்திலும் ஒருவர் பலியாகியுள்ளார்.
இந்தியாவுக்கு 6வது இடம்...
இந்நிலையில் பன்றி காய்ச்சல் நோய் காரணமாக அதிக மக்களை இழந்த நாடுகள் வரிசையில் இந்தியா 6வது இடத்தை பிடித்துள்ளது. நேற்று இந்தியா 8வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
முதல் மூன்று இடங்களில் பிரேசில்(657), அமெரிக்கா (593), அர்ஜென்டினா(465) உள்ளன.