அக்டோபர் 27ல் ராகு பெயர்ச்சி-திருநாகேஸ்வரத்தில் சிறப்பு வழிபாடு
தஞ்சாவூர்: வரும் அக்டோபர் 27ம் தேதி ராகு பகவன் மகர ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம்பெயர்கிறார். இதையடுத்து திருநாகேஸ்வரத்தில் சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது திருநாகேஸ்வரம். நாகராஜாக்களான ஆதிசேஷன், தக்ஷன், கார்க்கோடகன் மூவரும் இங்கு வந்து ஈஸ்வரனை வணங்கியதால் இப்பகுதி திருநாகேஸ்வரம் என அழைக்கப்படுகிறது.
ராகு கிரகத்திற்குரிய தலமாக இது கருதப்படுகிறது. இங்கு கடவுளுக்கு பால் அபிஷேகம் செய்தால் அந்த பால் நீல நிறமாகிவிடுகிறது.
இந்நிலையில் வரும் 27ம் தேதி காலை 9.04 மணிக்கு ராகு பெயர்ச்சி நடக்கிறது. தற்போது மகர ராசியில் இருக்கும் ராகு பெருமான் அன்று தனுசு ராசிக்கு இடம்பெயர்கிறார்.
அன்றைய தினத்தில் பக்தர்கள் ராகு தலமான இங்கு வந்து வழிபட்டால், வாழ்வில் மகிழ்ச்சி கூடும் என்பதால் கோவில் கமிட்டியினர் சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
அன்று சிறப்பு ஹோமங்கள், அபிஷேகம், லட்சார்ச்சனை, சுவாமி வீதி உலா, அன்னதானம் ஆகியவை நடைபெறுகிறது. மேலும், ரிஷபம், மிதுனம், கன்னி, தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசிகாரர்களுக்கு தோஷ நிவர்த்தி பரிகாரமும் செய்யப்படுகிறது
மேலும், லட்சார்ச்சனை பூஜைகளை இரண்டு கட்டமாக செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி முதல் கட்டமாக அக்டோபர் 21 முதல் 23 வரையும், இரண்டாவது கட்டமாக அக்டோபர் 29ம் முதல் நவம்பர் 1ம் தேதி வரையும் லட்சார்ச்சனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.