பிலிப்பைன்ஸ் கப்பல் மூழ்கி 9 பேர் பலி-33 பேர் மாயம், 926 பேர் மீட்பு
பிலிப்பைன்ஸ் நாட்டின் சான்டோஸ் நகரில் இருந்து சுமார் 968 பேருடன் இலோயிலா நகருக்கு சூப்பர்பெரி 9 என்ற கப்பல் சென்று கொண்டிருந்தது.
இந்நிலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் இந்த கப்பலின் ஜெனரேட்டர் பகுதிகளில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சயைடந்த கப்பல் அதிகாரிகள் உடனடியாக அரசுக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து பயணிகளை பத்திரமாக மீட்க பிலிப்பைன்ஸ் கப்பற்படை, விமானப்படை, ஹெலிகாப்டர் ஆகியவை பறந்தன. ஆனால், அவர்கள் வருவதற்குள் கப்பல் மூழ்க துவங்கிவிட்டது. இதில் 9 பேர் பலியானார்கள்.
மேலும் 33 பயணிகள் நிலைமை குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை. அவர்களும் இந்த விபத்தில் பலியாகி இருப்பார்கள் என அஞ்சப்படுகிறது.
இது குறித்து கப்பல்படை அதிகாரி ஒருவர் கூறுகையில்,
கப்பலில் இருந்த 926 பயணிகளையும், கப்பல் ஊழியர்களையும் மீட்டுவிட்டோம். அதே போல் 2 வயது சிறுவனின் உடல் உட்பட 9 சடலங்களையும் கைப்பற்றியுள்ளோம். மீட்பு பணியில் அந்த பக்கமாக வந்த மீனவர்களும் உதவினார்கள். அவர் சுமார் 20 பேர் வரை காப்பாற்றினார்கள் என்றார்.
இந்த விபத்துக்கான சரியான காரணம் குறித்து அறிய பிலிப்பைன்ஸ் அரசு விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது.