ராமலிங்க ராஜுவுக்கு மாரடைப்பு -மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
ஹைதராபாத்தில் உள்ள நிஜாம் மருத்துவ அறிவியல் கழக (நிம்ஸ்) மருத்துவமனைக்கு நேற்று மாலை நாலே முக்கால் மணியளவில் கொண்டு வரப்பட்டார் ராஜு. பின்னர் இரவு எட்டு மணிக்கு தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டார்.
சத்யம் மோசடி காரணமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ராஜு என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜுவுக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு ஆஞ்சியோகிராம் பார்க்கப்படும் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
ராஜுவுக்கு என்ன ஆனது, அவருக்கு என்ன மாதிரியான சிகிச்சைகள் தரப்படுகின்றன என்பது குறித்து டாக்டர்கள் வாய் திறக்க மறுத்து விட்டனர். இன்னும் 2 நாட்களுக்கு ராஜு மருத்துவமனையில் இருப்பார் எனத் தெரிகிறது.
ராஜு அடைக்கப்பட்டுள்ள சன்சலகுடா சிறை கண்காணிப்பாளர் சந்திரசேகர் கூறுகையில், மாலை 4 மணிக்கு ராஜவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சிறை டாக்டர் வரவழைக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. ராஜுவைப் பரிசோதித்து பார்த்த டாக்டர், உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என அறிவுறுத்தினார் என்றார்.
வழக்கமாக விசாரணைக் கைதிகளுக்கு அவசர சிகிச்சை தேவைப்பட்டால் அரசு உஸ்மானியா பொது மருத்துவமனைக்குத்தான கொண்டு செல்வார்கள். ஆனால் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வசதி உள்ள கைதிகளாக இருந்தால், அவர்களை நிம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்வார்களாம். அதன்படியே ராஜுவை நிம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாம் சிறை நிர்வாகம்.
தற்போது நிம்ஸ் மருத்துவமனையின் இதயவியல் பிரிவு தலைவர் டாக்டர் சேஷகிரி ராவ் தலைமையிலான டாக்டர்கள் குழு ராஜுவை கண்காணித்து வருகிறது.