For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சீன ஊடுருவல்-அமுக்கப் பார்க்கும் வெளியுறவுத்துறை

By Staff
Google Oneindia Tamil News

India map
டெல்லி: இந்தியாவுக்குள் சீன ராணுவத்தினர் ஊடுருவியது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறையும் பாதுகாப்புத்துறையும் மாறுபட்ட குரலில் பேசி வருகின்றன.

காஷ்மீரின் லடாக் பகுதிக்குள் சீன ராணுவம் நுழைந்து சிவப்பு சாயம் கொண்டு சீனா என்று எழுதி அதை தனது எல்லையாக குறித்துவிட்டுச் சென்றுள்ளது.

ஆனால், இந்த விவகாரத்தில் இந்திய வெளியுறவுத்துறையும் பாதுகாப்புத்துறையும் மாறுபட்ட குரலில் பேசி வருகின்றன.

குறிப்பாக சொதப்பல்களுக்குப் பேர் போன வெளியுறவுத்துறை இது ஒரு பிரச்சனையே அல்ல என்று சொல்லி விவகாரத்தை மூடி மறைக்க முயன்று வருகிறது.

அதே நேரத்தில் பாதுகாப்புத்துறை சீனாவின் இந்தச் செயல் மிக ஆபத்தானது என்று எச்சரித்துள்ளது. இது குறித்து ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் சீனாவுடன் பேசப்படும் என்றும் கூறியுள்ளது.

ஆனால், வெளியுறவுத்துறையோ ஒன்றுமே நடக்காதது மாதிரி விவகாரத்தை அப்படி அமுக்க முயன்று வருகிறது.

இது குறித்து சீனாவுக்கான இந்திய தூதர் ஜெய்சங்கர் பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில்,

சீன ஊடுருவல் தொடர்பாக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியான செய்திகளை நானும் பார்த்தேன். அவர்களுடைய அடிப்படை கருத்துகளே தவறானதாகும். செய்திகளை உருவாக்குவதே செய்தி வர்த்தகத்தின் இயற்கையான நடைமுறை. உணர்ச்சிகரமான நிகழ்வுகளை செய்தியாக்குவதும் அதில் ஒரு வகை.

எனினும், 30க்கும் மேற்பட்ட டி.வி. சேனல்களில் காட்டப்பட்ட படங்கள் குறித்து மத்திய அரசு சரி பார்க்கும் என்றார்.

வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறுகையில்,

இந்திய-சீன எல்லை மிக அமைதியாக உள்ளது. மற்ற நாடுகளுடன் உள்ள பிற எல்லைகளை ஒப்பிடும்போது இந்த எல்லை மிக அமைதியாக இருக்கிறது. அங்கு எந்த பிரச்சினையும் இல்லை.

நமது எல்லைகள் பாதுகாப்பாக உள்ளது என அனைவருக்கும் உறுதி கூறுகிறேன். தற்போதைய அத்துமீறல் பிரச்னைக்குத் தீர்வு காணப்படும்.

இந்தியாவின் வான் எல்லைக்குள் நுழைந்தது குறித்து சீனாவிடம் ஏற்கனவே விளக்கம் கேட்டுள்ளோம். தரை வழியாக இந்திய-சீனா இடையே சுமார் 3,000 கி.மீ. நீள எல்லை உள்ளது. இது போன்ற அத்துமீறல்கள் தொடர்பாக ஒரு செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இத்தகைய பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்றார் பொத்தாம் பொதுவாக.

ஆனால், வெளியுறவுத்துறை இவ்வாறு கூறினாலும் பாதுகாப்புத்துறை சீனாவின் செயல்களை எச்சரிக்கையுடன் பார்க்க வேண்டும் என்கிறது.

இது குறித்து சீன எல்லைப் பகுதி ராணுவ அதிகாரிகளுடன் இந்திய அதிகாரிகள் பேசுவர் என்றும் பாதுகாப்புத்துறை கூறியுள்ளது.

இதற்கு முன்னரும் இந்திய எல்லைக்குள் சீனப் படைகள் பல முறை ஊடுருவியிருந்தாலும் இந்தியாவுக்குள் சிவப்பு வண்ணத்தால் சீனா என்று எழுதிவிட்டுப் போனது இதுவே முதல் முறை என்கின்றனர் பாதுகாப்புத்துறை அதிகாரிகள்.

சீனா மறுப்பு:

இந் நிலையில் சீன வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் நுழைந்ததாக கூறப்படும் தகவல்கள் உண்மைக்கு மாறானவை. அது போன்ற சம்பவம் நடக்கவே இல்லை. எல்லைப் பிரச்சனை குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை மூலமாக நியாயமான தீர்வு காணவே சீனா விரும்புகிறது என்று கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கண்டனமாம்...

ஊடுருவல் ஒரு பெரிய பிரச்சனையே இல்லை என்று காங்கிரஸ் அமைச்சரான எஸ்.எம். கிருஷ்ணா கூறியுள்ள நிலையில்,
இந்திய எல்லையில் அத்துமீறி சீனா நுழைந்ததற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், சீனாவின் அத்துமீறல் கண்டனத்துக்குரியது. இது குறித்து வெளியுறவுத் துறையும், பாதுகாப்புத் துறையும் கவனம் செலுத்தி வருகின்றன. இந்தப் பிரச்னை குறித்து உயர் நிலையில் விவாதிக்கப்படுகிறது. சீனாவுக்கும் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. நமது அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவேத்கர் கூறுகையில், சீனாவின் அத்துமீறலை அரசு மிகச் சாதாரண நிகழ்வாக எடுத்துக் கொண்டுள்ளது.

சீன அரசிடம் தனது கடுமையான கண்டனங்களை இந்தியா தெரிவிக்க வேண்டும். கடந்த காலங்களில் சீனாவின் அத்துமீறல் குறித்து அருணாசலப் பிரதேச பாஜக எம்.பிக்கள் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டி உள்ளனர்.

இந்திய, வங்கதேச வெளியுறவுத் துறை அமைச்சர்கள் செவ்வாய்க்கிழமை சந்திக்கின்றனர். இந்தியாவில் ஊடுருவியுள்ள வங்கதேசத்தவர்களை அந் நாட்டுக்குத் திருப்பி அனுப்புவது குறித்து இக் கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் என்றார்.

சிதம்பரம் அமெரிக்கா பயணம்:

இந் நிலையில் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் இன்று அமெரிக்கா செல்கிறார். செப்டம்பர் 11ம் தேதி வரை அவர் அங்கு பல உயர் மட்டத் தலைவர்களை சந்திக்கிறார். அப்போது இந்த எல்லை விவகாரம் குறித்து அமெரிக்க அதிகாரிகளுடன் சிதம்பரம் பேசுவார் என்று தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X