ஹோட்டலைக் காலி செய்ய பிரணாப் உத்தரவு- மறுத்தார் கிருஷ்ணா
அரசு எனக்கு வீடு தரும் வரை ஹோட்டலிலிருந்து காலி செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்றும் கிருஷ்ணா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். வேறு மாற்று இடம் ஏற்பாடு செய்யாத நிலையில் என்னால் ஹோட்டலைக் காலி செய்ய முடியாது என்றும் கூறி விட்டார் கிருஷ்ணா.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பிரணாப் முகர்ஜி, வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா மற்றும் இணை அமைச்சர் சசி தரூர் ஆகியோர் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்கியுள்ளனர். அங்கிருந்து காலி செய்து அவரவர் மாநிலத்திக்குரிய பவன்களில் போய்த் தங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளேன் என்று கூறியிருந்தார் பிரணாப் முகர்ஜி.
பிரணாபின் உத்தரவைத் தொடர்ந்து சசி தரூர் ஹோட்டலைக் காலி செய்து விட்டார். ஆனால் எஸ்.எம்.கிருஷ்ணா காலி செய்ய மறுத்து விட்டார்.
வெளியுறவுத்துறை அமைச்சராக எஸ்.எம்.கிருஷ்ணா இருந்தாலும் கூட வெளியுறவுத்துறை தொடர்பான முக்கிய ஆலோசனைகளுக்கு பிரணாப் முகர்ஜியைத்தான் இன்னும் நாடுகிறார் பிரதமர் மன்மோகன் சிங் என்று பேச்சு அடிபடுகிறது.
சமீபத்தில் இந்தியா - பாகிஸ்தான் கூட்டறிக்கை தொடர்பாக லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் பிரச்சினை எழுப்பியபோது, கிருஷ்ணாவுக்குப் பதில் பிரணாப் முகர்ஜியைத்தான் பதிலளிக்க வைத்தார் பிரதமர்.
இதனால் எஸ்.எம்.கிருஷ்ணா சற்று அதிருப்தியுடன் இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் ஹோட்டலைக் காலி செய்யுமாறு பிரணாப் உத்தரவிட்டதால் கடுப்பான கிருஷ்ணா அதை ஏற்க மறுத்துள்ளார்.
இதற்கிடையே, பிரணாபின் நடவடிக்கையை காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது. இதுகுறித்து கட்சி செய்தித் தொடர்பாளர் மனீஷ் திவாரி கூறுகையில், சிக்கன நடவடிக்கைகளை அரசு எடுத்து வரும் நிலையில், அமைச்சர்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்குவதைத் தவி்ர்ப்பது நல்லது. இதுதொடர்பாக பிரணாப் எடுத்த நடவடிக்கை சரியானதே.
சம்பந்தப்பட்ட இரு அமைச்சர்களின் ஹோட்டல் பில்களையும் அரசு செலுத்தவில்லை. அவர்களது சொந்தப் பணத்திலிருந்துதான் அவற்றைக் கட்டியுள்ளனர் என்றார் திவாரி.