செல்போனில் 1ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆபாசப் படம் காட்டிய ஆசிரியர்
லக்னோ: உ.பி. மாநிலம் புலந்த்சாஹர் மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் தனது செல்போனில் ஆபாசப் படத்தை பார்த்துள்ளார். அத்தோடு நில்லாமல், 1ம் வகுப்பு, 2ம் வகுப்பு மாணவர்களுக்கும் அதைக் காட்டி ஆசிரியர் தொழிலுக்கே பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.
அந்த அசிங்கம் பிடித்த ஆசிரியரின் பெயர் சிவக்குமார். புலந்த்சாகர் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக உள்ளார்.
திங்கள்கிழமை இப்பள்ளியைச் சேர்ந்த 1ம் வகுப்பு, 2ம் வகுப்பு மாணவர்கள் தங்களது பெற்றோர்களிடம் ஆசிரியர் ஆபாசமான படத்தைக் காட்டியதாக கூறியுள்ளனர். இதையடுத்து பெற்றோர்கள் திரண்டு வந்து மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி ரமேஷ் சந்திர வர்மாவிடம் புகார் கொடுத்தனர்.
இதுகுறித்து வர்மா கூறுகையில், இந்தப் புகார் மிகக் கடுமையானது. இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதுவரை அவர் வகுப்புகளுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் மீதான தவறு நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
படம் பார்த்ததை யாருக்கும் சொல்லக் கூடாது என்று சிவக்குமார் மாணவர்களை மிரட்டி வைத்திருந்தாராம்.
இந்த சம்பவம் உ.பியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.