முகாம்களில் வதைபடும் அப்பாவித் தமிழர்கள்: அல்-ஜசீரா அம்பலம்
முகாம்களில் உள்ள அகதிகள் மற்றும் முகாம்களில் மனிதாபிமான சேவைகளில் ஈடுபட்டிருக்கும் மனிதாபிமானப் பணியாளர்கள் ஆகியோரை அல்-ஜசீரா பேட்டி கண்டுள்ளது.
தமிழர்களுக்கு எதிராகப் படுகொலைகள், யுத்தக் குற்றங்கள், கற்பழிப்புகள், கடத்தல்கள், சித்திரவதைகள், மனிதாபிமானமற்ற கொடூர நடத்தைகள், கைதுகள் மற்றும் தடுத்து வைப்புகள் உட்பட வன்முறை நடவடிக்கைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது என்றும் சர்வதேச சமூகம் கடுமையாக குற்றஞ்சாட்டி வருகிறது.
இந்த நிலையில் அல்-ஜசீரா டிவி வெளியிட்டுள்ள செய்தி கட்டுரையில், வன்னி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அகதிகள் மீது இலங்கை அரசினால் "அரசு பயங்கரவாதம்" கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சேனல் 4 வெளியிட்ட பயங்கர காட்சிகளின் பாதிப்பு இன்னும் மறையாத நிலையில் இன்னொரு சர்வதேச டிவி நிறுவனம் அகதிகள் முகாம்களில் தமிழர்கள் மிகவும் அபாயகரமான சூழலில் இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது இலங்கைக்கு மேலும் சிக்கலைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் பான் கி மூன் தைரியத்தில் இலங்கை அரசு இதையும் கண்டு கொள்ளாமல் விட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முகாம்களில் மாதம் 400 குழந்தைகள் பிறப்பு
இந்த நிலையில் எந்தவித அடிப்படை வசதியும் இல்லாத வன்னி முகாம்களில் மாதத்திற்கு 400 குழந்தைகள் பிறப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தக் குழந்தைகளைப் பராமரிக்க போதிய மருத்துவ வசதிகளும், ஊட்டச்சத்துக்களும் கிடைக்காத நிலையும் காணப்படுகிறது.
இலங்கையில் இறுதி கட்ட போர் நடந்தபோது வெளியேறிய 3 லட்சம் தமிழர்கள் பல்வேறு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர். 3 மாதம் கடந்து விட்ட போதிலும் அவர்களை சொந்த ஊருக்கு அனுப்ப இலங்கை அரசு மறுத்து வருகிறது. மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
அகதி முகாமில் ஏராளமான கர்ப்பிணி பெண்கள் உள்ளனர். தினமும் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இங்கு பிறக்கின்றன. தடுப்பு முகாமில் உள்ள கூடாரங்களுக்குள்ளேயே அவர்கள் குழந்தை பெற்று கொள்கின்றனர். இப்படி மாதம் 400 குழந்தைகள் பிறப்பதாக இங்கு சமூக சேவை பணிகளை ஆற்றி வரும் சர்வோதய நிறுவன தலைவர் ஆரியரத்னா கூறினார்.
பிறந்த குழந்தைகளை கவனிப்பதற்காக 800 தொட்டில்களை இந்த நிறுவனம் வழங்கியுள்ளது. ஆனால் முகாமில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாததால் கர்ப்பிணி பெண்களும், பிறந்த பச்சிளம் குழந்தைகளும் பல்வேறு அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.