தேனியில் 110 பவுன் நகை கொள்ளை
தேனி: தேனி அருகே சின்னமனூரில் தொண்டு நிறுவன அதிபர் வீட்டில் 110 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே காமாட்சிபுரத்தில் சென்டெக்ஸ் என்ற பெயரில் தொண்டு நிறுவனம், கல்வி நிறுவனம் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி மையம் நடத்தி வருபவர் பச்சைமால்.
இவர் நேற்று முன்தினம் உறவினர் வீட்டு திருமணத்திற்காக திசையன்விளைக்கு குடும்பத்தினருடன் சென்றார்.
இந்நிலையில் நேற்று காலை வீட்டு வேலைகளை செய்ய வந்த வேலைக்கார பெண் பரமேஸ்வரி வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவர் பச்சைமாலுக்கு தகவல் கொடுத்தார்.
கொள்ளையர்கள் கடப்பாறையால் கதவை உடைத்து உள்ளே புகுந்து சாவிகளை எடுத்து வீட்டிலிருந்த ஏழு பீரோக்களை திறந்துள்ளனர். அதில் இருந்த 110 பவுன் நகை, ரூ. 47 ஆயிரம் பணம் ஒன்றேகால் கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதனையடுத்து போலீஸார் வழக்கு பதிவு செய்து கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் சகிதம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.