சென்னைக்கு 15ல் கிருஷ்ணா நீர் திறப்பு-ஆந்திரா
சென்னை: சென்னைக்கு வரும் 15ம் தேதி கிருஷ்ணா நீர் திறந்துவிடப்படும் என ஆந்திர அரசு அறிவித்துள்ளது.
ஸ்ரீசைலம் நீர்தேக்க திட்டத்தின் ஒரு பகுதியாக தெலுங்கு கங்கா கால்வாய் தி்ட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் படி சென்னையில் இருக்கும் பூண்டி நீர் தேக்கத்துக்கு ஆந்திர அரசு ஆண்டுதோறும் 5 டிஎம்சி நீர் கொடுத்து வருகிறது.
இந்த நீர் சுமார் 408 கிமீ., தூரம் கடந்து சென்னை வருகிறது.
தற்போது ஸ்ரீசைலம் அணை நிரம்பிவிட்டது. ஆனால், கண்டலேறு அணையில் 22 டிஎம்சி நீர் பற்றாக்குறை உள்ளது. இந்நிலையில் தமிழக அரசு சமீபத்தில் சென்னை குடிநீர் திறந்துவிட வேண்டும் என ஆந்திர அரசை கேட்டு கொண்டது.
இதையடுத்து ஆந்திராவின் தற்காலிக முதல்வர் ரோசய்யா தலைமையில் உயர் குழு கூட்டம் இன்று ஹைதராபாத்தில் நடந்தது. அப்போது நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கண்டலேறு நீர்தேக்க பகுதியில் இருந்து சென்னைக்கு நீரை திறந்துவிடுமாறு ரோசய்யா தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆந்திர பாசனத்துறை அமைச்சர் லட்சுமைய்யா கூறுகையில்,
தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டுள்ளோம். மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திர அரசுகளுக்கு இடையே கிருஷ்ணா நதி தொடர்பாக போடப்பட்டுள்ள ஒப்பந்தப்படி சென்னைக்கு 15 டிஎம்சி நீர் திறந்துவிடப்பட வேண்டும். இதில் ஆந்திராவின் பங்கு 5 டிஎம்சி மட்டுமே.
வரும் 15ம் தேதி இந்த நீர் திறந்துவிடப்படும். கடந்த ஆண்டுகளை போலவே இந்த ஆண்டும் இரண்டு அல்லது மூன்று தவணைகளில் கொடுக்கப்படும் என்றார்.