நடிகர் விஜய் வந்தால் வரவேற்போம்-இளங்கோவன்
அவர் கூறுகையில்,
அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தமிழ்நாட்டில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து இளைஞர்களை சந்திக்கிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர் தனிக் கவனம் செலுத்தி உத்தரப் பிரதேசம் மற்றும் பிகார் மாநிலங்களில் காங்கிரசை மாபெரும் இயக்கமாக உயர்த்திக் காட்டினார்.
தமிழகத்திலும் 1967க்கு பிறகு முக்கியத்துவம் பெற முடியாமல் இருக்கும் காங்கிரஸ் அவரது சுற்றுப்பயணத்துக்கு பின்னர் முதல் நிலை இயக்கமாக மாறும். அரசியலுக்கு அப்பாற்பட்ட இளைஞர்களையும் அரசியலுக்குக் கொண்டு வந்து தமிழகத்தில் இருக்கும் மோசமான அரசியல் நாகரீகத்தை மாற்றும் முதல் படியாகவும் அவரது பயணம் அமையும்.
கோவையில் 10ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலைத்துறையை சேர்ந்தவர்களும் (விஜய்?), பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரசில் இணைவார்கள் என்றார்.
நீங்கள் திமுக தலைமையை விமர்சித்ததால் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உங்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளாரே என்று கேட்டதற்கு,
நான் திமுகவை எதிர்த்து இதுவரை எதுவும் கூறவில்லை. காங்கிரஸ் தலைவர்களின் தியாகங்களைத்தான் எடுத்துக் கூறி வருகிறேன். திசைகளை குறிப்பிட்டு பேசியது வட மாநில அரசியலைதான். என் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது என்றார்.
கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உங்கள் கட்சித் தலைவர் தங்கபாலு கூறியுள்ளாரே என்று கேட்டதற்கு,
எனக்கும் தங்கபாலுவுக்கும் உள்ள விவகாரத்தை ராகுல் காந்தி வருகைக்கு பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்றார்.
சட்டமன்றத் தேர்தலில் விஜயகாந்துடன் கூட்டணி அமைக்குமாறு தலைமையை வலியுறுத்துவீர்களா என்று கேட்டதற்கு,
இப்போது திமுக கூட்டணியில் இருக்கிறோம். தேர்தல் நேரத்தில் யார்-யாருடன் கூட்டணி என்பதை சோனியா காந்தி முடிவு செய்வார் என்றார்.
நடிகர் விஜய் காங்கிரசுக்கு வருவாரா என்று கேட்டதற்கு, வந்தால் வரவேற்போம் என்று மட்டும் பதில் தந்தார் இளங்கோவன்.