பணிந்தார் கிருஷ்ணா-அறையை காலி செய்தார்
டெல்லி: மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் உத்தரவையடுத்து வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா 5 நட்சத்திர ஹோட்டல் அறையை காலி செய்துவிட்டு வேறு இடத்தில் குடியேறியுள்ளார்.
வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா மற்றும் இணையமைச்சர் சசி தரூர் ஆகியோர் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்கியிருந்தனர். மத்திய அரசின் செலவுகளைக் குறைக்கும் வகையில் அவர்களை அவரவர் மாநிலத்திக்குரிய பவன்களில் போய்த் தங்குமாறு நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கோரியிருந்தார்.
இதையேற்று தரூர் ஐந்து நடசத்திர ஹோட்டலில் இருந்து கடற்படையின் கெஸ்ட் ஹவுசுக்கு இடம் மாறிவிட்டார். ஆனால், கேரள பவனில் தங்க மறுத்துவிட்டார். காரணம், அங்கு ஜிம் இல்லையாம்.
அதே நேரத்தில் ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கான பில்லை தனது சொந்தப் பணத்திலிருந்து செலுத்தியதாகவும் விளக்கம் தந்தார் தரூர்.
அவர் கூறுகையில், நான் மக்கள் வரிப் பணத்தை செலவு செய்தால் அது வெட்கித் தலைகுனிய வேண்டிய ஒன்றுதான். அப்படி எந்த செலவையும் செய்யவில்லை. அரசின் சலுகைகளையும் நான பயன்படுத்துவதில்லை. எனது சேமிப்பிலிருந்துதான் செலவு செய்கிறேன் என்றார்.
ஆனால், எஸ்.எம்.கிருஷ்ணா மட்டும் காலி செய்ய மறுத்தார். நான் என் சொந்தப் பணத்தில் தான் மெளரியா ஷெராட்டன் ஹோட்டலில் தங்கியுள்ளேன். எனக்கு நல்ல வீடு ஒதுக்கப்படும் வரை இங்கு தான் தங்குவேன் என்று கூறியிருந்தார்.
ஆனால் அவரை காங்கிரஸ் தலைமை அழைத்து கண்டித்ததாகத் தெரிகிறது. இதையடுத்து மெளரியா ஷெராட்டன் ஹோட்டல் அறையை காலி செய்துவிட்டு தூதரகப் பணிகளுக்கான கல்வி நிலையத்தின் விருந்தினர் மாளிகைக்கு கிருஷ்ணா இடம் பெயர்ந்துள்ளார்.
வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுப் பயணங்களை குறைப்பது, விளம்பர செலவுகளை குறைப்பது, 5 நட்சத்திர ஹோட்டல்களில் மாநாடு நடத்த தடை போன்ற நடவடிக்கைகள் மூலம் அரசின் செலவில் 10 சதவீதத்தை குறைக்குமாறு அனைத்து அமைச்சகங்களுக்கும் நிதியமைச்சகம் ஆணை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.