For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்டாலின் தொகுதியில் அவலம் - பள்ளியை இரவில் பார் ஆக்கும் 'குடிமக்கள்'!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை தி.நகர் தெற்கு போக் சாலையில் உள்ள பள்ளிக்கூடத்தை இரவு நேரங்களில் குடிகாரர்கள் திறந்தவெளி பார் ஆக மாற்றி கொட்டமடித்து வருவதாக மக்கள் கொதிப்புடன் கூறுகின்றனர்.

இது மாநகராட்சி நடுநிலைப் பள்ளி ஆகும். பகல் நேரத்தில்தான் இது பள்ளிக் கூடமாக காட்சி அளிக்கம். ஆனால் இரவாகி விட்டால் இங்குள்ள மைதானத்தை திறந்தவெளி பார் ஆக மாற்றி விடுகிறார்கள் குடிகாரர்கள்.

இது இன்று நேற்றல்ல, கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக நடந்து வருகிறதாம். ஆனால் இந்த பார் விளையாட்டைத் தடுக்க உருப்படியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லையாம்.

பள்ளிக்கூடத்திற்கு அருகே காலியாக உள்ள பெரும்பாலான இடத்தை பல்வேறு நபர்களும் ஆக்கிரமித்துள்ளனர். மேலும், இப்பகுதிக்கு அருகே உள்ள ஏரிக்கரையில் ஏராளமான குடிசைவாசிகள் வசிக்கின்றனர். பள்ளிக் கூடத்திற்கு அருகிலேயே இந்த குடிசைப் பகுதி உள்ளது.

பள்ளிக் கூடத்திற்கென்று தனியாக சுற்றுச் சுவர் கிடையாது. எனவே பள்ளிக் கூடமும், குடிசைப் பகுதியும் ஒரே வளாகம் போல காணப்படுகிறது.

இதன் காரணமாக இரவு நேரங்களில் குடிசைவாசிகள் இந்தப் பள்ளிக்கூடத்தை தங்களது இருப்பிடமாக மாற்றி விடுகிறார்கள்.

இந்த நிலைமை காரணமாக இங்கு படித்து வரும் மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போகிறது. தற்போது வெறும் 115 பேர் மட்டும்தான் இங்கு படிக்கிறார்களாம்.

இப்பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமி என்ற பெண் கூறுகையில், இரவு நேரங்களில் எங்கெங்கிருந்தோ ஆண்கள் இங்கு வந்து விடுகிறார்கள். விடிய விடிய குடித்துக் கொண்டிருக்கிறார்கள். யாரும் கேள்வி கேட்க முடிவதில்லை. அவர்களில் பலர் சமூக விரோதிகளாக உள்ளனர் என்றார்.

குடிசைவாசிகளுக்கு இரவு நேரம் முழுக்க பள்ளிக் கூடம் அவர்களது வசிப்பிடமாக மாறி விடுகிறது. பள்ளிக் கூடத்திற்குள் புகுந்து தூங்குகிறார்கள், குளிக்கிறார்கள், துணி காயப்போடுகிறார்கள்.

இந்த நிலைமை குறித்து பலமுறை அதிகாரிகளுக்குப் புகார் போயும் கூட யாரும் கண்டு கொள்ளவில்லை என்று புலம்புகிறார்கள் மாணவர்கள்.

இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ. துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் என்பது குறிப்பிடத்தக்கது. துணை முதல்வர் நேரடியாக தலையிட்டு இந்த அவல நிலையை நீக்கி பள்ளிக் கூடத்தின் புனிதத்தை மீட்டு, மாணவர்களுக்கு நல்ல சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X