ஈழம்-இந்திய ராணுவ மருத்துவ குழு நாடு திரும்பியது
கொழும்பு: போரில் அடிபட்டு இலங்கை முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்ற இந்திய மருத்துவ குழுவினர் நாடு திரும்பினர்.
இலங்கையில் போரி்ன் இறுதி கட்டத்தின் போது சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் இலங்கை முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டனர். அவர்களில் பலர் போர் காரணமாக குற்றுயிரும் குலையுயிருமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து இந்தியாவிலிருந்து ராணுவ மருத்துவர்கள் 50 பேரை கொண்டு குழு வன்னி முகாமுக்கு சென்றது. அங்கு கடந்த 6 மாதமாக தங்கி வரும் அவர்கள் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர்களில் சுமார் 4 ஆயிரம் பேருக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளது. அதில் கவலைக்கிடமாக கிடந்த 500 பேருக்கு பெரிய அளவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
முகாம்களில் இருக்கும் பகல் நேர மருத்துவ மையத்தில் வைத்து 4,500 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. திரிகோணமலை, புல்மோடை மருத்துவமனை மற்றும் வவுனியா மாவட்டம் செட்டிகுளம் மருத்துவமனையில் உள்ள 115 படுக்கை வசதிகள் மூலம் 500 பேருக்கு சிகிச்சை தரப்பட்டுள்ளது.
4 பேர் தான் மரணமாம்...
இந்நிலையில் தமிழர்கள் அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுவிட்டதாக கூறி அவர்களை இலங்கை அரசு நேற்று வழியனுப்பி வைத்தது. அதற்காக நடந்த விழாவில் இந்திய தூதர் அலோக் பிரசாத் கலந்து கொண்டார். அவர் இலங்கை அரசுக்கு ரூ. 1 கோடி மதிப்புள்ள மருந்து மற்றும் மருத்துவ கருவிகள் வழங்கினார்.
விழாவில் அவர் பேசுகையில்,
தமிழர்களுக்கு மருத்துவ சேவை செய்யும் விவகாரத்தில் இந்தியா விரைந்து உதவியுள்ளது. 72 மணி நேரத்தில் அவர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ கருவிகள், மருந்து பொருட்கள், டாக்டர்களை கொண்ட மருத்துவ சிகிச்சைக்கு தயார் செய்து கொடுத்தது.
சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தால் அழைத்து வரப்பட்ட சுமார் 7 ஆயிரம் பேருக்கு இந்திய குழுவினர் சிகிச்சை கொடுத்துள்ளனர். கடந்த 6 மாத காலத்தில் மருத்துவ குழு முகாம்களில் இருவர் மட்டுமே மரணமடைந்துள்ளனர். இரண்டு பேர் வரும் வழியில் மரணமடைந்துள்ளனர் என்றார்.