கட்டமைப்பு வசதியில்லாத கல்லூரி அங்கிகாரம் ரத்து-அரசு எச்சரிக்கை
சென்னை: தமிழகத்தில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் நடைபெற்றும் பொறியியல் கல்லூரிகளில் அதிரடி நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தேவைப்பட்டால் கல்லூரிகளின் அங்கிகாரம் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
இதுவரை 50 சதவீத கட்டமைப்பு வசதி இருக்கும் பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி வழங்கி வருகிறது. ஆனால், அதை அடுத்தாண்டு முதல் அதை 95 சதவீதமாக உயர்த்த தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக அவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு விரைவில் கடிதம் ஒன்றை அனுப்ப இருக்கின்றனர். அண்ணா பல்கலைக்கழகத்துடன் ஆலோசித்து இந்த திட்டத்தை அடுத்த ஆண்டு முதல் அமுல் செய்யவிருக்கின்றனர்.
இந்த அதிரடி நடவடிக்கையின் காரணமாக தமிழகத்தில் உள்ள 444 பொறியியல் கல்லூரிகளின் தரம் மற்றும் கட்டமைப்பு வசதி உயர்த்தப்படும் என அரசு எதிர்பார்க்கிறது. இதனால் அந்த கல்லூரிகளில் படித்து வரும் சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் அமையும்.
இதன்மூலம் தகுதியான ஆசிரியர்கள் இல்லை, நூலகம் சரியில்லை, கல்வித்திறன் எதிர்பார்த்த இல்லை போன்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் குறைகள் நீக்கப்படும்.
இந் நிலையில் இந்த ஆண்டு புதிதாக திறக்கப்பட்ட 46 கல்லூரிகளில் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளிலும் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கல்லூரிகள் வெகு தாமதமாக துவக்கப்பட்டதால், வருகை நாட்களை சரிகட்டும் விதமாக இது நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.