5.58 லட்சம் பிளஸ் ஒன் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்
சென்னையில் இதுதொடர்பாக இன்று நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் கருணாநிதி முதல் சைக்கிளை மாணவர் ஒருவருக்கு வழங்கி விநியோகத்தைத் தொடங்கி வைத்தார்.
தாழ்த்தப்பட்டோர் உள்பட அனைத்து சமுதாயங்களையும் சேர்ந்த மாணவர்கள் இதில் பயன் பெறுவார்கள். 132 கோடியே 42 லட்சம் ரூபாய் செலவில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.
நிகழ்ச்சியில், ஊரக தொழில்துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தாழ்த்ப்பட்டோர் நலத்துறை அமைச்சர் தமிழரசி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அனைவருக்கும் கல்வி-ரூ. 900 கோடி நிதி:
இதற்கிடையே நெல்லை, தூத்துக்குடி , கன்னியாகுமரி , விருதுநகர் ஆகிய 4 மாவட்ட தொடக்க கல்வி, பள்ளிக் கல்வி, மெட்ரிகுலேஷன் கல்வி அதிகாரிகளின் ஆய்வுக்கூட்டம், பாளையங்கோட்டையில் நடந்தது.
கூட்டத்தில், தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குற்றாலிங்கம், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பெருமாள்சாமி, தொடக்க கல்வித் துறை இயக்குநர் தேவராஜன், மெட்ரிகுலேஷன் இயக்குநர் மணி ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்துக்கு பின் அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி திட்டத்துக்காக ரூ.900 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 1.2 கோடி மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்கப்பட்டன. அடுத்த ஆண்டு 1 முதல் 12ம் வகுப்பு வரை இலவச பாட புத்தகங்கள் வழங்குவதற்காக வகுப்பு வாரியாக மாணவர்கள் எண்ணிக்கையை சரிபார்த்து அறிக்கை அனுப்பப்பட உள்ளது என்றனர்.