சிங்களத்தின் கைக்கூலி என சாமியை தூற்றுவார்களே என்று பரிதாபப்படுகிறேன்- விஜயகாந்த்
சென்னை: நான் விடுதலைப் புலிகளிடம் பணம் வாங்கியதாக, சிங்கள இனவெறி அரசின் சார்பில் தகவல்தர முன்வந்துள்ள சுப்பிரமணியசாமியை சிங்கள அரசின் கைக்கூலி என்றுதான் உலகம் அவரை தூற்றுமே என்று நினைக்கும் பொழுது அவர் நிலையை கண்டு பரிதாபப்படுகிறேன் என்று கூறியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
சாமி சமீபத்தில் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது விஜயகாந்த் உள்ளிட்டோர் புலிகளிடமிருந்து பணம் வாங்கியுள்ளனர். இதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன என்று கூறியிருந்தார்.
இதற்கு விஜயகாந்த் பதிலளித்துள்ளார். அந்தப் பதில்:
தமிழ்நாட்டில் உள்ள அரசியல் பிரமுகர்களுக்கு விடுதலைப்புலிகள் மூலம் கோடிக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்றும், இந்த விவரங்களை சிங்கள அரசு தன்னிடம் கொடுத்துள்ளது என்றும், அந்த பட்டியலில் என்னுடைய பெயர் இடம் பெற்றிருப்பதாகவும் சுப்பிரமணியசாமி குறிப்பிட்டுள்ளார்.
யாரைப் பற்றியாவது ஏதாவது சொல்லி தானும் அரசியலில் இருப்பதாக மக்களிடம் காட்டிக்கொள்வதற்காக வீணான விளம்பரங்களைத் தேடி அவர் அறிக்கை விடுவார் என்பதால் நான் அதைப்பற்றி பொருட்படுத்தாமல் இருந்தேன். இருப்பினும், என்னுடைய நலம் நாடும் நண்பர்கள் சிலர் மக்களுக்கு இதை விளக்க வேண்டும் என்று கூறியதால் நான் பதில் அளிக்க கடமைப்பட்டுள்ளேன்.
ஈழத் தமிழர்களுக்கு நான்தான் உதவியுள்ளேன்...
சுப்பிரமணியசாமி கூறியுள்ளதை போல நான் கனடா நாட்டிற்கு சென்ற பொழுதோ அல்லது தமிழ்நாட்டில் இருந்த பொழுதோ விடுதலைப்புலி இயக்கத்திடம் எந்த பணத்தையும் பெறவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னல்படும் ஈழத்தமிழர்களுக்கு என்னால் இயன்ற உதவிகளை அவ்வப்பொழுது செய்துள்ளேனே தவிர அவர்களிடம் இருந்து நான் எதையும் பெற்றதில்லை.
பணம் வாங்கிய பிறகுதான் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேச ஆரம்பித்தேன் என்று குற்றச்சாட்டு கூறும் சுப்பிரமணியசாமிக்கு நான் கூற விரும்புவது, 18 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்த என்னுடைய மூத்த மகனுக்கு பிரபாகரன் என்ற பெயர் சூட்டியுள்ளதை மட்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
தமிழினப் படுகொலை நடத்தியதால், உலக நீதிமன்றத்தின் முன்பு போர்க் குற்றவாளியாக சிங்கள அரசு நிறுத்தப்பட வேண்டும் என்று உலகத்தமிழ் இயக்கங்கள் மட்டும் இல்லாமல் ஐ.நா சபை உள்பட அனைத்து மனிதாபிமான இயக்கங்களும் கோரிக்கை விடுத்துள்ளன.
சிங்கள அரசின் கைக்கூலி...
இந்த சூழ்நிலையில் சிங்கள இனவெறி அரசின் சார்பில் தகவல்களை தர முன்வந்துள்ள சுப்பிரமணியசாமியை சிங்கள அரசின் கைக்கூலி என்றுதான் உலகம் அவரை தூற்றுமே என்று நினைக்கும் பொழுது அவர் நிலையை கண்டு பரிதாபப்படுகிறேன்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலையின் பின்னணி பற்றிய விசாரணையில் பல முக்கிய தலைகள் உருளும் என்று தெரிகிறது. அதில் சுப்பிரமணிய சாமியின் பெயர் இடம்பெறாமல் பார்த்துக்கொண்டால் அவருக்கு அதுவே போதுமானது.
அரசியல் முகவரி இல்லாத சாமி...
என்னை விமர்சிப்பதுதான் அரசியல் என்று எழுபது ஆண்டுகால அரசியல்வாதியே எண்ணுகிற போது அரசியலில் முகவரி தேடும் சுப்பிரமணியசாமி அறிக்கை விடுவதில் ஆச்சரியம் இல்லை என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.