வன்னி முகாம்களில் பெருந்துயரம்!-சேனல் 4 வீடியோ வெளியீடு
கடுமையான கெடுபிடிகள் நிலவும் இந்த முகாம்களுக்குள் வெளியாட்கள் யாரும் அத்தனை சுலபத்தில் நுழைந்துவிட முடியாது. ஆனாலும் செல்போனில் படமாக்கப்பட்ட அந்த முகாம்களின் சில கோரக் காட்சிகளை உலகின் முன் வைத்துள்ளது சேனல் 4.
சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காமல், இலங்கை தூதரகத்தில் கையூட்டுப் பெற்றுக் கொண்டு சில முன்னணி செய்தியாளர்கள் பொய்யான செய்திகளை இலங்கைக்கு ஆதரவாகப் பரப்பி வருகிறார்கள்.
ஆனால் இந்த சோதனையான தருணத்தில், பிரிட்டன், அமெரிக்கா போன்ற அந்நிய நாடுகளின் மீடியாக்களே தமிழர் படும் வேதனைகளை ஓரளவுக்காவது வெளியிட்டு வருகின்றன.
கடுமையான நோய் வாய்ப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் கூட, வெற்றுத் தரையில் படுத்தபடி மருந்து ஏற்றிக் கொள்ளும் அவலம். வயதான, பலவீனமான ஒருவர் தனது முகத்தில் மொய்த்துக்கொண்டிருக்கும் ஈக்களை விரட்டுவதற்குக் கூட திராணியில்லாதவராக, பரிதாபமக மண் தரையில் படுத்துக்கிடப்பதை இதில் காண முடிகின்றது.
வவுனியாவில் உள்ள முகாம்களில் மொபைல் போன்கள் மூலம் கமராவை பயன்படுத்தி இந்த வீடியோ இரண்டு வார காலத்துக்கு முன்னர் எடுக்கப்பட்டுள்ளன.
ஏற்கெனவே, தமிழ் இளைஞர்களை சிங்கள ராணுவத்தினர் நிர்வாணப்படுத்தி, கண்களைக் கட்டி சுட்டுக் கொன்ற காட்சியையும் இந்த சேனல் 4 தொலைக்காட்சிதான் வெளியிட்டது. இதற்காக அந்த நிர்வாகத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுப்போம் என்று இலங்கை அரசு கொக்கரித்து வந்தது. ஆனால் இப்போதோ, அப்படி ஏதும் திட்டமில்லை என மறுத்துள்ளது.
இந்த சூழலில் சேனல் 4 வெளியிட்டுள்ள இந்த இரண்டாவது வீடியோ சர்வதேச அளவில் மீண்டும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது.