ஜெ. 'ரெஸ்ட்'-அண்ணா சிலைக்கு மதுசூதனன் மாலை
சென்னை: வரும் 15ம் தேதி அண்ணா பிறந்த நாளையோட்டி அவரது சிலைக்கு அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் மாலைசூட்டி மரியாதை செலுத்தப்படும் என அக்கட்சி அறிவித்துள்ளது.
அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தொடர்ந்து கொட நாட்டில் ரெஸ்ட் எடுத்து வரும் நிலையில் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை:
பேரறிஞர் அண்ணாவின் 101வது பிறந்தநாள் விழாவினை அடுத்து வரும் 15ம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை அண்ணாசாலையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு கழக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.
இதில் தலைமைக் அதிமுக நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொள்வார்கள்.
மேலும் நிகழ்ச்சியில், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மன்றம், புரட்சித் தலைவி ஜெயலலிதா பேரவை, எம்ஜிஆர் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி உள்பட அதிமுகவை சார்ந்த பல்வேறு அமைப்புகளும், அதை சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளும், உடன் பிறப்புகளும் பெருந்திரளாக வருகை தந்து பேரறிஞர் அண்ணாவுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அம்மாவை போல் யாரும் இல்லை-வெங்கடேசன்...
இந்நிலையில் தென் சென்னை அசோக் நகரில் நடந்த மாவட்ட அதிமுக இளைஞர் பாசறை ஆலோசனை கூட்டத்தில் பேசிய அந்த அமைப்பின் மாநிலச் செயலாளர் டாக்டர் வெங்கடேஷ்,
தமிழகத்தில் எத்தனையோ தலைவர்கள் தோன்றியுள்ளனர். ஆனால், அவர்கள் யாராலும் சிந்திக்க முடியாததை சிந்தித்து செயல்படு்த்தியவர் அம்மா தான்.
நாடு சீரோடு இருக்க இளைய சமுதாயம் தான் காரணம் என்பதால் தான் அவர் இளைஞர், இளம்பெண் பாசறையை உருவாக்கினார். அவரது திட்டங்களை போல வேறு யாரும் திட்டங்களை கொண்டு வந்தது இல்லை.
விசுவாசம், உழைப்பு ஆகிய இரண்டும் தான் அதிமுகவின் கண்கள். விஸ்வாசத்தோடு உழைத்தால் அவர் சமுதாயத்தில் எந்த நிலையில் இருந்தாலும் அம்மா அவரை உயர் பதவியில் அமர வைப்பார்.
இளைஞர்களே உங்களை சுற்றி சுற்றி பல போலி முகங்கள் வருகின்றன. அவர்களிடம் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்களுக்கு அம்மா பாதுகாப்பாக உள்ளார். நீங்கள் அம்மாவுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
இளைஞர்களுக்கு வேலை கொடுக்காமல் ஏதோ சிறிய பணத்தை கொடுக்கிறார்கள். இன்று இளைஞர்களின் வாழ்வு கேள்விக்குறியாக மாறிவிட்டது. இந்த ஆட்சியுடன் மோதி நீங்கள் வெற்றி பெற வேண்டும்.
நல்லதை நினைத்து போராடுவோம். போராட்டக் குணம் இருந்தால்தான் வரலாறு படைக்க முடியும். உலகப்போரில் அழிந்த ஜப்பான் இன்று முன்னேறி இருக்கிறது என்றால் அதற்கு அவர்களது போராட்ட குணம்தான் காரணம். அதே போல் நாமும் போராடுவோம். திமுக ஆட்சியை அகற்றுவோம் என்றார்.