ஸ்வைன்-தடுப்பூசி எதிர்பார்த்ததை விட விரைவில் வருகிறது
இதன்மூலம் அமெரிக்காவில், வருகிற குளிர்காலத்திற்கு முன்பாகவே, பன்றிக் காய்ச்சல் தாக்கும் அபாயம் அதிகம் உள்ளவர்களாக கணிக்கப்பட்டுள்ள 15.9 கோடி பேருக்கும் தடுப்பு மருந்து செலுத்தப்படக் கூடிய வாய்ப்பு அதிகரித்துள்ளது.
கர்ப்பிணி பெண்கள், 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மற்றும் குழந்தைகள், உடல்நிலை மோசமாக இருப்பவர்கள் மற்றும் சுகாதார பிரிவு ஊழியர்கள் ஆகியோருக்கு தடுப்பு மருந்து முதலில் கொடுக்கப்படும்.
இந்த ஆண்டு இறுதிக்குள் 19.5 கோடி யூனிட் தடுப்பு மருந்துகள் தயாராகி விடும். தற்போது தடுப்பூசி உற்பத்தியில் தாமதம் நிலவுகிறது. ஆனால், முன்பு கூறப்பட்ட அளவை விட தற்போது பாதி அளவு போதும் என்பது தெரிய வந்துள்ளதால், தடுப்பூசி உற்பத்தி இரட்டிப்பாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
15 மைக்ரோகிராம் அளவு கொண்ட தடுப்பு மருந்தை ஒருமுறை செலுத்தி பரிசோதிக்கப்பட்டதன் முடிவுகளை
தி நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆப் மெடிசின் வெளியிட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த சோதனையை நடத்தி முடித்துள்ள சிஎஸ்எல் நிறுவனம், அமெரிக்காவுக்கு லட்சக்கணக்கான யூனிட் தடுப்பு மருந்துகளை அனுப்பும் ஆர்டரைப் பெற்றுள்ளது.
சோதனையின் முதல் மூன்று வார கால முடிவில் 15 மைக்ரோ கிராம் தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டவர்களில், 97 சதவீதம் பேருக்கு பன்றி காய்ச்சல் எதிர்ப்பு சக்தி கிடைத்துள்ளது.
அதே நேரத்தில் 30 மைக்ரோ கிராம் மருந்து கொடுக்கப்பட்டவர்களுக்கும் இவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இதனால் 15 மைக்ரோ கிராம் போதும் என முடிவு செய்துள்ளோம் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த மருந்தால் மோசமான பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படவில்லை. ஆனால், இந்த ஆராய்ச்சியில் பங்கேற்றவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு தலைவலி, கை வலி போன்றவை ஏற்பட்டுள்ளது.
அதே நேரத்தில் இந்த மருத்து தயாரிப்பு சோதனைக்காக தேர்வு செய்யப்பட்டவர்கள் அனைவரும் ஆரோக்யமான இளைஞர்கள் தான். எனவே 9 வயதுக்கு மேற்பட்டவர்களிடமும் சோதனை நடத்த இந்த நிறுவனம் முயன்று வருகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம், சீனாவின் தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனமான சினோவக் பயோடெக் எதிர்பார்த்ததை விட பாதி அளவு தடுப்பூசி செலுத்தினால் போதும் என கூறியிருந்தது.
ஆனால், அவர்கள் தங்களது சோதனை பற்றி வேறு எந்த தகவலும் அளிக்காததால் அதை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அதேபோல் தடுப்பு மருந்து தயாரிக்கும் முயற்சியில் இருக்கும் 10 சீன நிறுவனங்களும் அமெரிக்காவில் அதை விற்பனை செய்யும் உரிமை பெறவில்லை.
தற்போது பன்றி காய்ச்சல் நோய் 168 நாடுகளுக்கு பரவியுள்ளது. அமெரிக்காவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் பரவ ஆரம்பித்தது. அங்கு இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் இந்த நோயின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் வழக்கத்துக்கு மாறாக விரைவாக துவக்கப்பட்ட தென் கிழக்கு பகுதியில் வேகமாக பரவி வருகிறது.
8 முதல் 10 நாளில் எதிர்ப்பு சக்தி...
தடுப்பூசி குறித்து அமெரிக்காவின் தேசிய அலர்ஜி மற்றும் தொற்றுநோய் கழக இயக்குனர், டாக்டர் ஆன்டனி பாவ்சி கூறுகையில்,
தடுப்பூசி செலுத்தப்பட்டால் 8 முதல் 10 நாட்களுக்குள் நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்துவிடும். தடுப்பூசிகளை அவசரமாக தயாரித்து அதிகம் தாக்கப்பட்ட பகுதிகளுக்கு முதலில் கொடுத்தால் இதை விரைவாக கட்டுப்படுத்தி விடலாம்.
இந்த நோய் பணக்கார நாடுகளில் குளிர்காலம் முடிவதற்குள் கட்டுப்படுத்தப்படும். ஆனால், ஏழை நாடுகளின் நிலைமை தான் பரிதாபமாக இருக்கிறது. இங்கு மருந்து தட்டுப்பாடு காரணமாக பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றார்.