சயீத் மீது நடவடிக்கை இல்லை- பாக். மீது அமெரிக்காவிடம் இந்தியா புகார்
வாஷிங்டன்: மும்பை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய சதிகாரர்கள் மீது பாகிஸ்தான் அரசு உருப்படியான நடவடிக்கை எதையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. பாகிஸ்தானுக்கு நெருக்குதல் கொடுத்து லஷ்கர் இ தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத் உள்ளிட்டோரை சட்டத்தின் முன் நிறுத்த அமெரிக்கா நிர்ப்பந்தம் கொடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.
அமெரிக்க பயணத்தை மேற்கொண்டுள்ள ப.சிதம்பரம் அங்கு வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டனை சந்தித்துப் பேசினார். அப்போது இந்தக் கோரிக்கையை வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அஜ்மல் கசாப் தொடர்பான விசாரணை நிலவரத்தை நான் ஹில்லாரிக்கு விளக்கிச் சொன்னேன். மேலும், பாகிஸ்தான் தரப்பிலிருந்து இதுவரை எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாததையும் எடுத்துக் கூறினேன். ஹபீஸ் சயீத் இன்னும் சுதந்திரமாக நடமாடி வருவதையும் தெரிவித்தேன்.
மும்பை தாக்குல் சம்பவத்தை இந்தியா அணுகியுள்ள முறையை அமெரிக்கா புரிந்து கொண்டுள்ளது. பாகிஸ்தான் இந்த சம்பவத்தை எப்படி அணுகியுள்ளது என்பதையும் அமெரிக்கா புரிந்து கொண்டுள்ளது. இதற்கு மேல் அமெரிக்காவுக்கு நாம் விளக்கத் தேவையில்லை. இரு நாடுகளுக்கும் இடையிலான வித்தியாசத்தை இதுவே விளக்கிக் காட்டும். இதற்கு மேல் தனியாக விளக்கத் தேவையில்லை.
சயீத் தொடர்பாக இந்தியா ஆறு முறை பாகிஸ்தானிடம் ஆவணங்களை அளித்துள்ளது. ஆனால் பாகிஸ்தான் அரசு அந்த ஆவணங்களின்படி சயீத் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இன்னும் அவர் சுதந்திரமான நபராகவே இருக்கிறார்.
பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் வரும் ஊடுறுவல்காரர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவும் அமெரிக்காவின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மாதத்திற்கு 50 முதல் 60 முறை ஊடுறுவல்கள் நடைபெறுகின்றன. கடந்த மே மாதத்திலிருந்தே ஊடுறுவல் அதிகரித்து வருகிறது.
அதேபோல பாகிஸ்தான் மண்ணிலிருந்து செயல்படும் தீவிரவாதகிளின் எண்ணிக்கையும் குறைந்தபாடில்லை. மிரட்டல் அளவும் குறையவில்லை. இதன் காரணமாக தொடர்ந்து இந்தியா பாதுகாப்புடனும், விழிப்புடனும் இருக்க வேண்டியுள்ளது என்றார்.
--