உத்தப்புரம் செல்ல முயன்ற பிருந்தா காரத் மதுரையில் கைது
உத்தப்புரம் கிராமத்தில் தலித் மக்களுக்கும், பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே நீண்ட காலமாக ஜாதிப் பிரச்சினை இருந்து வருகிறது. இரு சமூகத்தினரையும் பிரிக்கும் வகையிலான நீண்ட சுவர் பெரும் அவமானச் சின்னமாக உத்தப்புரத்தில் தொடர்ந்து இருக்கிறது. சுவரை இடிக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட் கட்சி அங்கு தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறது.
இந் நிலையில் பிருந்தா காரத் நேற்று மதுரைக்கு வந்தார். இன்று காலை அவர் உத்தப்புரம் கிராமத்திற்குச் செல்ல முயன்றார். அவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் திரண்டு வந்தபோது திருப்பரங்குன்றம் அருகே அவர்களை தடுத்து நிறுத்தினர்.
உத்தபுரத்தல் பதற்றம் நிலவுவதால் அங்கு செல்ல அனுமதியில்லை என்று கூறி திருப்பரங்குன்றம் காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர்.
திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் நிருபர்களிடம் பேசிய பிருந்தா,
உத்தபுரம் பிரச்னையை தமிழக அரசு சரியான முறையில் கையாளவில்லை. திமுக அரசு அங்கு பிரரித்தாளும் கொள்கையை கையாள்கிறது. இரு பிரிவினருக்கும் தனியாக ரேஷன் கடைகள், சமுதாய கூடங்கள் என அமைத்து அரேச பிரிவினையை ஆதரிக்கிறது.
அகில இந்திய மாதர் சங்க கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்ற என்னை காரணம் கூறாமல் போலீசார் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். கைதுக்கான காரணத்தை கோரியுள்ளளேன், ஒரு மணி நேரமாகியும் எனக்கு அதை போலீசார் கொடுக்கவில்லை என்றார்.
கைது செய்யவில்லை-போலீஸ்:
இந் நிலையில் நீண்ட நேரத்துக்குப் பின் பிருந்தா கராத் உத்தபுரம் செல்ல போலீசார் அனுமதி அளித்தனர். இதையடுத்து மதுரை மாவட்ட எஸ்.பி. மனோகரன் மற்றும் டி.எஸ்.பி. பாதுகாப்புடன் பிருந்தா கராத் உத்தபுரம் புறப்பட்டுச் சென்றார்.
இது குறித்து எஸ்.பி.மனோகரன் கூறுகையில், பிருந்தா காரத் உத்தப்புரம் செல்ல அனுமதி கேட்ட கொடுத்த மனு ஏற்கனவே நிராகரிக்கப்பட்டுவிட்டது. இந் நிலையில் அங்கு பதற்றம் நிலவும் சூழலில் அவர் இன்று அங்கு செல்ல முயன்றதால் தடுக்கப்பட்டார். அவர் கைது எல்லாம் செய்யப்படவில்லை. தனிப்பட்ட நிகழ்ச்சிக்காக அவர் அங்கு செல்வதாகக் கூறியதால் அவரை செல்ல அனுமதித்தோம் என்றார்.
போலீஸார் மீது நடவடிக்கை-மார்க்சிஸ்ட் கோரிக்கை:
இந் நிலையில் பிருந்தா காரத் கைது செய்யப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரைத் தடுத்து வைத்து கைது செய்த காவல் துறையினர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம் தேவை..:
முன்னதாக நேற்று அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மதுரையில் நடைந்த கருத்தரங்கில் 'தீண்டாமையும் சட்டச் செயல்பாடும்' என்ற தலைப்பில் பிருந்தா காரத் பேசுகையில்,
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மீதான தாக்குதல் இன்றளவும் தொடர்ந்து கொண்டு தான் உள்ளன. அவர்களுக்கு சமூகப் பாதுகாப்பை ஏற்படுத்தும் வகையில் வன்கொடுமைச் சட்டம் கொண்டுவரப்பட்டு 20 ஆண்டுகள் ஆகிவிட்டன.
ஆனால், இந்தச் சட்டம் மூலம் அவர்களை முழுமையாகப் பாதுகாக்க சமுதாயமும், அரசும் தவறிவிட்டன. ஜாதிய அமைப்பு, ஒடுக்குமுறை போன்றவை ஜனநாயகத்துக்கு பிடித்த கிரகணங்கள். இதனால் தான் இந்தியா முழுவதும் இருள் சூழ்ந்துள்ளது.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்படும் 50 சதவீத வழக்குகள் காவல்துறையினரால் நீதிமன்றத்துக்கே எடுத்துச் செல்லப்படுவதில்லை.
எனவே, இச்சட்டத்தின்கீழ் பதியப்படும் வழக்குகளை ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் நீதிமன்றத்துக்குச் எடுத்துச் செல்வதற்கு கண்காணிப்புக் குழு அமைக்கவும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கொடுக்கப்படும் தண்டனைகள், இந்திய தண்டனை சட்டத்தில் அளிக்கப்படும் தண்டனைகளை விட அதிகமாக இருக்கும்விதமாக இச்சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரவேண்டும்.
மேலும், மதம் மாறியவர்களுக்கும் இச்சட்டம் செல்லும் விதமாகவும், இதுதொடர்பான வழக்குகளில் சாட்சியம் அளிப்போரைப் பாதுகாக்கும் வகையிலும் சட்டத் திருத்தங்கள் கொண்டு வரவேண்டும் என்றார் பிருந்தா.