தூத்துக்குடியில் விடுதலைப் புலிகள் ஊடுருவல்?
தூத்துக்குடி: தூத்துக்குடியில் விடுதலை புலிகள் ஊடுருவியுள்ளதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் விடுதிகளில் போலீசார் மற்றும் கடலோர காவல் படையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
தமிழக கடலோர பகுதிகளில் விடுதலை புலிகள் ஊடுருவலை தடுக்க ஏற்கனவே 'ஆபரேசன் பேரிகாட்' என்ற பெயரில் கடலோர காவல் படை குழுமம்-கியூ பிராஞ்ச் உள்ளிட்ட 8 துறையினர் சேர்ந்து அவ்வபோது ஒத்திகை நடத்தி வருகின்றனர்.
கடலோர பாதுகாப்பு படையினர், போலீசார் உள்ளி்ட்டோர் 24 மணி நேரமும் உஷார் படுத்தப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.
இந் நிலையில் தூத்துக்குடியில் நேற்று அதிரடியாக தூத்துக்குடி மற்றும் புறநகர் பகுதிகளில் லாட்ஜுகள் மற்றும் விடுதிகளில் சந்தேகப்படும் நபர்கள் யாராவது ஊடுருவி உள்ளார்களா, என்பது குறித்து போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
இதில் நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட கடலோர பாதுகாப்பு குழும டிஎஸ்பி மணிரத்னம், இன்ஸ்பெக்டர்கள் தருவை ரவிக்குமார், தூத்துக்குடி பிரான்சிஸ், பார்த்திபன், மகிமை வீரன், தெய்வேந்திரன் மற்றும் போலீசார் ஈடுபட்டனர்.
விடிய விடிய இந்த சோதனை நடத்தது.