நியூயார்க் நகரை தீவிரவாதிகள் தாக்கியதன் 8வது நினைவு நாள்
உலகின் பெரியண்ணனாக, தனிப் பெரும் சக்தியாக திகழ்ந்து வரும் அமெரிக்கா ஆடிப் போன நாள் 2001, செப்டம்பர் 11.
அன்று காலை 8.46 மணிக்கு நியூயார்க் நகரின் முத்திரை கட்டடங்களான இரட்டைக் கோபுரங்களின் வடக்குப் பகுதி கட்டடம் மீது விமானம் ஒன்று மோதியது.
இது ஏதோ விபத்து என பலரும் நினைத்த நேரத்தில், அடுத்த சில நிமிடங்களில் அடுத்த கோபுரம் மீது இன்னொரு விமானம் வந்து மோதியபோதுதான் இது தீவிரவாதத் தாக்குதல் என்று தெரிய வந்து அமெரிக்கா அதிர்ந்தது.
அந்த அதிர்ச்சி விலகுவதற்குள் அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் மீது இன்னொரு விமானம் மோதியது. அதே சமயத்தில் பென்சில்வேனியாவில் ஒரு விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது.
ஒட்டுமொத்த அமெரிக்காவும் ஸ்தம்பித்து நின்ற நேரம் இது. அமெரிக்காவுக்கே இந்த நிலையா என்று உலகம் அதிர்ச்சி அடைந்த தருணம் அது.
இந்த தாக்குதல் சம்பவங்களில் மொத்தம் 3017 பேர் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதலை யார் நடத்தியது என்று அமெரிக்க அதிகாரிகள் மண்டையை உடைத்துக் கொண்டபோது, நாங்கள்தான் செய்தோம் என்று அறிவித்தது அல் கொய்தா. 19 பேரை வைத்து இதை நடத்தினோம் என்றும் அது அறிவித்தது.
விமானங்களைக் கடத்தி மோத விட்டதும் வெளிச்சத்துக்கு வந்தது.
இதையடுத்து அல் கொய்தாவை வேரறுக்க அமெரிக்கப் படைகள் இறக்கி விடப்பட்டன. அப்போது ஆப்கானிஸ்தானில் பதுங்கியிருந்தார் பின் லேடன். இதையடுத்து அவர் இருக்கும் இடத்தைக் குறி வைத்து தாக்குதல் தொடங்கியது.
அன்று தொடங்கிய தாக்குதல் பின்னர் ஈராக் என திசை மாறி இன்னும் முடியாமல் நீண்டு கொண்டுள்ளது. இதுவரை பின் லேடன் பிடிபடவில்லை. உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்பதும் குழப்பமாகவே உள்ளது.