ஊழல் அதிகாரிகளின் சொத்து பறிமுதல்-தலைமை நீதிபதி யோசனை
டெல்லி: ஊழல் குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்படும் அரசு ஊழியர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்யும் வகையில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் கூறினார்.
ஊழல் குற்றங்களை ஒழிப்பது தொடர்பான மாநாட்டில் அவர் பேசுகையில்,
பொது மக்களிடம் இருந்து லஞ்சமாக பெற்ற பணத்தில் வாங்கி குவிக்கும் அரசு ஊழியர்களின் சொத்துகளை பறிமுதல் செய்வது நியாயமானதே. லஞ்ச ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் அரசு ஊழியர்களின் சொத்துகளை பறிமுதல் செய்வதற்கு உரிய சட்டம் கொண்டு வர வேண்டும்.
அரசு ஊழியர்கள் ஊழல் புரிந்து அதன் மூலம் சொத்துக்களை குவித்திருந்தால் அவரிடம் உள்ள சொத்துகளை ஜப்தி செய்யும் பொறுப்பு அம்மாநில அரசுக்கு உண்டு.
லஞ்ச-ஊழல் தடுப்பு புலனாய்வு அமைப்புகள் தொடர்ந்துள்ள சுமார் 9,000 வழக்குகள் நீதிமன்ற பற்றாக்குறை காரணமாக நிலுவையில் இருந்து வருகின்றன.
வழக்கு தொடருவதற்கு உரிய அனுமதியை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து வழங்குவதன் மூலமும் தாமதத்தை தவிர்க்க முடியும்.
ஒரு அரசு அதிகாரி மீது லஞ்ச ஊழல் புகார் எழுந்தால் அதை விசாரிக்க அனுமதி வழங்குவதற்கு 5 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை ஆகிறது. இப்படி காலதாமதமானால் விசாரணையை எப்படி நடத்த முடியும்?.
ஊழல் தொடர்பான வழக்குகளைக் கையாள்வதற்கு சிறப்பு வழக்கறிஞர்கள் உருவாக வேண்டும். அப்போதுதான் இத்தகைய வழக்குகளைச் சிறப்பாக நடத்த முடியும்.
மத்தியப் புலனாய்வு அமைப்பான சிபிஐ அரசு வழக்கறிஞர்களையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. அதற்குப் பதில் குறிப்பிட்ட வழக்கறிஞர்களைத் தேர்வு செய்து அவர்களுக்குப் பயிற்சியளிப்பதன் மூலம் இந்த வழக்குகளை அவர்கள் திறமையாகக் கையாள முடியும்.
ஊழல் வழக்குகளில் அதிக எண்ணிக்கையில் சாட்சிகளை சேர்ப்பதில் தான் சிபிஐ கவனம் செலுத்துகிறது. அதற்குப் பதில் வலுவான ஒரு சில சாட்சிகள் மூலம் வழக்கு விசாரணையை விரைவிலேயே முடிக்க முடியும். வழக்குகளை 3 ஆண்டுகள் முதல் 4 ஆண்டுகள் வரை இழுக்க வேண்டிய அவசியமிருக்காது. 10 சாட்சிகளை நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்துவதை விட ஒரே ஒரு உறுதியான சாட்சியை முன்னிறுத்தி வழக்கை சிறப்பாக நடத்தலாம்.
ஊழல் வழக்குகளை விசாரிப்பதற்கு அனுமதி அளிப்பதற்கு நீண்ட காலத்தை எடுத்துக் கொள்கின்றனர். குறிப்பிட்ட அரசு அதிகாரி லஞ்ச ஊழல் புரிகிறார் என்பதற்கு உரிய ஆதாரங்களை அளித்தால் அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் வழக்கு பதிவு செய்யவும் அனுமதி அளிக்கப்பட வேண்டும்.
மத்திய அரசின் முன்னோடி திட்டமான கிராமப்புற வேலை உறுதியளிப்பு திட்டத்தில் முறைகேடுகள் நடைபெறுகின்றன. இந்த திட்டத்தின் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கும் பட்டியல்கள் போலியாக தயாரிக்கப்பட்டு எந்த வேலையும் செய்யாத இடைத்தரகர்கள் ஊதியம் பெற்று வருவதாக குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. இதேபோல் அத்தியாவசிய பொருட்களை பொது மக்களுக்கு வழங்கும் பொது வினியோக திட்டத்திலும் முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன என்றார் பாலகிருஷ்ணன்.