டெல்லி மெட்ரோ ரயில் தடம்புரண்டது
டெல்லி: டெல்லியில் மெட்ரோ ரெயில் ஒன்று காலை திடீரென்று தடம்புரண்டது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்திரபிரஸ்தா ரயில் நிலையத்தில் இருந்து யமுனா நகருக்கு சென்று கொண்டிருந்த அந்த ரயிலின் பெட்டி ஒன்று காலை சுமார் 6.00 மணிக்கு தடம்புரண்டது.
இதனால் அப்பகுதியில் ரயில் இயக்கம் பாதிக்கப்பட்டது. இந்த விபத்துக்கான காரணமும் தெரியவில்லை.
இன்னொரு ரயில் தாமதம்...
முன்னதாக, தொழில்நுட்ப கோளாறு காரணமாக மற்றொரு டெல்லி மெட்ரோ சுமார் 15 நிமிடம் தாமதமாக கிளம்பியதாக ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
யமுனா நதிக்கரையில் இருந்து துவாராக செக்டார் 9 ரயில் நிலையத்துக்கு சென்று கொண்டிருந்த ரயில் ஒன்று ராஜீவ் சௌக் பகுதியில் நிறுத்தப்பட்டது.
இந்த ரயிலின் பிரேக் சரியாக வேலை செய்யாததால் விபத்தை தடுக்கும் நோக்கத்தில் அது நிறுத்தப்பட்டதாகவும், பின்னர் பயணிகளுக்கு வேறு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டது என டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அபாய கட்டத்தில் யமுனை வெள்ளம்...
தொடர் மழை காரணமாக யமுனை ஆற்றில் வெள்ள பெருக்கெடுத்துள்ளது. இதனால் ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹத்னிகுன்ட் அணை நிரம்பிவிட்டது. அதிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால் டெல்லியில் யமுனை நதிக்கு அருகே இருக்கும் தாழ்வான பகுதிகள் நீருக்குள் மூழ்க துவங்கியுள்ளன.
இது குறித்து டெல்லி இயற்கை சீற்றங்களை தடுப்பு பிரிவு அதிகாரி பன்ஷ் ராஜ் கூறுகையில்,
நேற்று இரவு யமுனையில் 204.84 மீ. நீர் சென்று கொண்டிருந்தது. இது அபாய கட்ட அளவான 204.83 மீ., விட 1 செமீ அதிகமாகும்.
இன்று இரவுக்குள் அது 205 மீ. அளவை எட்டிவிடும் என நினைக்கிறோம். இதையடுதது சில்லா கத்தர், கத்தர்பூர் போன்ற பகுதிகளில் இருந்து மக்கள் நிவாரண முகாம்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இதனால் யாரும் கவலையடைய தேவையில்லை என்றார்.