இப்போதைக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை-ரஜினி
சென்னை: அரசியலில் ஈடுபடும் எண்ணம் எதுவும் இப்போதைக்கு இல்லை என்று மீண்டும் அறிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் கவிஞர் வாலி தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது.
கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உரையாற்றிய இந்த கருத்தரங்குக்கு சிறப்பு அழைப்பாளராக ரஜினிகாந்த் அண்ணா அறிவாலயத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
பின்னர் அங்குள்ள கலைஞர் கருவூலத்தை சுற்றிப் பார்த்த ரஜினி, "கலைஞர் கருவூலத்தைச் சுற்றிப் பார்க்க ஒரு நாள் போதாது. இதன் வரலாற்றை தெரிந்துக் கொள்ளவும் ஒரு நாள் போதாது' என்றார்.
காங்கிரஸ் கட்சியில் சேருவதற்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளாரே என செய்தியாளர்கள் கேட்டதற்கு "அவரது அழைப்புக்கு நன்றி. அரசியலில் ஈடுபடும் எண்ணம் எதுவும் இப்போது இல்லை. அரசியல் வாழ்க்கை பற்றி முடிவெடுத்தால் அது பற்றி யோசிப்பேன்' என்றார் ரஜினிகாந்த்.
பின்னர் முதல்வர் கருணாநிதிக்குப் பக்கத்தில் அமர்ந்தபடி இரண்டரை மணிநேரம் நிகழ்ச்சியைக் கண்டு ரசித்தார்.
திமுகவை உரசும் விதத்தில் ராகுலின் சமீபத்திய சென்னை விசிட் அமைந்திருந்தது. ரஜினியை காங்கிரசில் சேர அழைத்திருந்த ராகுல், அடுத்து தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து ஆட்சியமைக்கும் என்றார்.
ராகுலுக்கு சரியான பதிலடி தரவே ரஜினியை அறிவாலயத்துக்கு அழைத்து, அவர் வாயாலேயே காங்கிரஸ்காரர்களுக்கு பதிலும் சொல்ல வைத்தார் கலைஞர் என்கிறார்கள் திமுக வட்டாரத்தில்!