சன் நியூஸ் டிவியில் 'வைகோ அழைக்கிறார்'!
மதிமுக ஸ்பான்சர் செய்யும் இந்த விளம்பரத்தில் பேசும் வைகோ, அண்ணாவின் பெருமைகளை எடுத்துச் சொல்லி அவரை நினைவுகூறும் வகையில் நடத்தப்படும் மதிமுக மண்டல மாநாட்டுக்கு வருமாறு மக்களுக்கு அழைப்பு விடுக்கிறார்.
''வாருங்கள் தமிழர்களே.. வாருங்கள்.. உங்கள் ஊழியன் வைகோ அழைக்கிறேன்.. வாருங்கள்'' என்று முடியும் இந்த விளம்பரம் வைகோவின் உணர்ச்சிப்பூர்வமான சிறிய உரையாக வெளியாகிறது.
சன் நியூஸ் தவிர மேலும் பல தமிழ் தொலைக்காட்சிகளிலும் இந்த விளம்பரம் வெளியாகி வருகிறது.
மதிமுகவினர் கைதுக்கு கண்டனம்:
இந் நிலையில் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மாநிலங்களுக்கு இடையே ஓடும் நதிகளை தேசிய நதிகளாக அறிவிக்கவும், நதிகளை இணைக்கவுமான திட்டத்தை நிறைவேற்றுவதே நாட்டின் இன்றியமையாத தேவை என்பதே பண்டித ஜவகர்லால் நேரு காலத்தில் இருந்து நிபுணர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிற கருத்தாகும்.
இந்திரா காந்தி ஆட்சிக் காலத்திலும் நதிகள் இணைப்புக் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமராக இருந்த வாஜ்பாய் நதிகள் இணைப்பு நாட்டுக்குத் தேவை என்பதை எண்ணி, அதை நிறைவேற்றுவதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் பொறுப்பேற்றபோது அந்தக் கூட்டணியில் இடம் பெற்று இருந்த மதிமுக சார்பில் தீபகற்ப நதிகள் இணைப்பிற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று நான் முன் வைத்த கோரிக்கை அரசின் குறைந்தபட்ச செயல் திட்டத்தில் சேர்க்கப்பட்டது.
நதிகள் இணைப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 2004ம் ஆண்டு 1,200 கி.மீ மறுமலர்ச்சி நடைபயணம் மேற்கொண்டேன்.
மேதைகளும், நிபுணர்களும் நதிகள் இணைப்புதான் நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லது என்று கூறிவரும் நிலையில் அதற்கு முற்றிலும் மாறுபட்ட கருத்தை காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தெரிவித்ததை நான் விமர்சித்தேன். அது போலவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண.டியனும் விமர்சித்தார்.
இதனால் மதுரையில் காங்கிரஸ் வழக்கறிஞர்கள் என்னுடைய உருவ பொம்மையையும் எரித்துள்ளனர்.
இதைக் கண்டித்து மதிமுக அமைப்புச் செயலாளர் சுப்பிரமணி உள்ளிட்ட தோழர்கள் வேலூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மதுரை சம்பவத்திற்காக எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை, மதிமுக அமைப்புச் செயலாளர் வேலூர் சுப்பிரமணி மற்றும் கழகத் தோழர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
மதுரை காங்கிரஸ் வழக்கறிஞர்களை கைது செய்ய வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை அல்ல. ஆனால், எங்கள் இயக்கத் தோழர்களைக் கைது செய்தது அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார் வைகோ.