பவாரை கழற்றி விட தயாராகும் காங்கிரஸ்
டெல்லி: மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ள காங்கிரஸ் விருப்பம் இல்லாமல் உள்ளதாம். இதனால் காங்கிரஸ் அங்கு தனித்துப் போட்டியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து காங்கிரஸ் கட்சியில் இருவேறு கருத்து நிலவுகிறது.
தொகுதிப் பங்கீட்டை சுமுகமாக முடிக்க மகாராஷ்டிர தேர்தலுக்கான காங்கிரஸ் நிர்வாகக் குழுத் தலைவராக விலாஸ்ராவ் தேஷ்முக், பிரசாரக் குழுத் தலைவராக மத்திய அமைச்சர் சுசீல்குமார் ஷிண்டே ஆகியோரை கட்சித் தலைமை நியமனம் செய்துள்ளது.
மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு இன்னும் ஒரு மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியும் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து மாநிலத்தில் கணிசமான தொகுதிகளைக் கைப்பற்றின.
காங்கிரஸ் 17 இடங்களிலும் தேசியவாத காங்கிரஸ் 8 இடங்களிலும் வெற்றிபெற்றன. காங்கிரஸ் அதிகத் தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளதால் சட்டப்பேரவைத் தேர்தலின்போது கூட்டணி அமைக்காமல் மொத்தமுள்ள 288 பேரவைத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட வேண்டும் என்ற கருத்து கட்சியில் பலமாக எழுந்துள்ளது.
குறிப்பாக மத்திய அமைச்சரும் மகாராஷ்டிர முன்னாள் முதல்வருமான விலாஸ்ராவ் தேஷ்முக், தனித்துப் போட்டியிட வேண்டும் என்ற கருத்தை கட்சித் தலைவர் சோனியா காந்தியிடம் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.
அவரது கருத்துக்கு கட்சியின் பொதுச் செயலரும் பிரதமர் அலுவலக இணையமைச்சருமான பிரித்விராஜ் சவாண் ஆதரவு தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் சரத் பவாருக்கு மிக அதிக செல்வாக்குள்ள மேற்கு மகாராஷ்டிர பகுதியில் பலத்த பின்னடைவு ஏற்பட்டது. இதைக் காரணம் காட்டி, சொந்த பிராந்தியத்திலேயே சறுக்கிய பவாருடன் எதற்குக் கூட்டணி என்று கேட்கிறார்களாம் பவார் எதிர்ப்பு காங்கிரஸார்.
அதேசமயம், சிவசேனா- பாஜக கூட்டணிக்கு கடும் சவாலாக இருக்கக் கூடியவர் பவார். எனவே அவரை விட்டு விடக் கூடாது என்று பவார் ஆதரவு காங்கிரஸார் கருத்து தெரிவித்துளளனராம்.
மேலும், லோக்சபா தேர்தலில் பவார் கட்சிக்கு சறுக்கல் ஏற்பட்டாலும் கூட அதை வைத்து சட்டசபைத் தேர்தலில் அக்கட்சியை சாதாரணமாக மதிப்பிட்டு விட முடியாது. தனித்துப் போட்டியிட்டால் 60 சீட் வரை பவார் கட்சியால் வெல்ல முடியும் என்று ஒரு கணிப்பு கூறுகிறது.
எனவே பவார் கட்சியை கழற்றி விட காங்கிரஸ் முயலக் கூடாது. அப்படி செய்தால் அது தேர்தல் முடிவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அந்தக் கணிப்புகள் காங்கிரஸை எச்சரிக்கின்றனவாம்.
இரு மாதிரியான கருத்துக்களை கட்சியினர் கூறி வருவதால் காங்கிரஸ் மேலிடம் இன்னும் முடிவு எதையும் எடுக்காமல் உள்ளது.