லஷ்கர்-இ-தொய்பாவுக்கு இந்திய இயக்கங்கள் உதவி-ப.சிதம்பரம்
அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு நாடு திரும்பிய அவர் இன்று அனைத்து மாநில போலீஸ் தலைமை அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில்,
மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு பின் இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
எல்லை தாண்டி நடத்தப்படும் தீவிரவாத தாக்குதல் இந்தியாவுக்கு கவலை தருவதாக இருக்கிறது. தீவிரவாதத்தை பார்த்து கொண்டு சும்மா இருக்கமாட்டோம். அதை ஒரு போதும் பொறுத்து கொள்ளமாட்டோம்.
தீவிரவாத தாக்குதல்களை முறியடிக்க தேவையான பயிற்சிகள் வீரர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. எங்காவது தீவிரவாத தாக்குதல் நடந்தால் தற்போது அதை நம்மால் எளிதாக முறியடிக்க முடியும்.
லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஸ்-இ-முகமது போன்ற தீவிரவாத அமைப்புகள் இந்தியா மீது தாக்குதல் நடந்தும் திட்டத்தில் இருக்கின்றன. அவர்கள் தாக்குதல் நடத்த புதிய வழிகளை கண்டுபிடிக்க முயன்று வருகின்றனர்.
அவர்களுக்கு இந்தியாவில் இருக்கும் சில அதிருப்தி இயக்கங்களும் உதவி வருகின்றன. இதன்மூலம் இந்த அன்னிய தாக்குதலுக்கு அவர்கள் இந்திய முகம் கொடுக்க பார்க்கிறார்கள்.
பாதுகாப்பு நிறுவனங்கள் கடந்த ஆண்டு 12 தீவிரவாத இயக்கங்களை அடையாளம் கண்டுள்ளன. இந்த ஆண்டு முதல் ஆறு மாதத்தில் 13 அமைப்புகள் செயலிழக்கச் செய்யப்பட்டன.
90 சதவீத வன்முறைக்கு மாவோயிஸ்ட் காரணம்...
குடியரசு- ஜனநாயக நாட்டில் ஆயுதம் ஏந்திய போராட்டம் என்பதற்கே இடமில்லை.
ஆனால், இடதுசாரி தீவிரவாத இயக்கங்கள் தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. இந்தியாவில் 17 மாநிலங்களில் இருக்கும் இவர்கள் தான் 90 சதவீத வன்முறைக்கு காரணமாக இருக்கிறார்கள். அவர்கள் தங்களது செயல்பாடுகளை விரிவாக்கவும் திட்டமிட்டு வருகின்றனர்.
அவர்கள் தங்களது தாக்குதல் திட்டம் மற்றும் ஆயுத பிரிவை வளர்த்து கொண்டுள்ளனர். போலீஸ் தாக்கிய வந்த அவர்கள் தற்போது ரயில், பாலம், மின்சாரம் மற்றும் தொலைதொடர்பு இணைப்புகளை துண்டித்து வருகின்றனர். இவர்களால் நாட்டின் முன்னேற்றம் தடைபடுகிறது.
காஷ்மீர் பகுதியில் தற்போது பாதுகாப்பில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. இருந்தாலும் சில பகுதிகளில் குறைபாடுகள் இருப்பதாக எச்சரிக்கை தரப்பட்டுள்ளது என்றார் சிதம்பரம்.