தமிழகத்தில் 4 புதிய மருத்துவ கல்லூரிகள்-ஸ்டாலின்
மதுராந்தகம் அருகே முன்னாள் மத்திய இணையமைச்சர் ரகுபதிக்கு சொந்தமான கற்பக விநாயக மருத்துவ கல்லூரியை துவக்கி வைத்து ஸ்டாலின் பேசுகையில்,
தமிழகத்தில் மருத்துவ கல்லூரி இல்லாத விழுப்புரம், தருமபுரி, திருவாரூர், பெரம்பலூர் மற்றும் சிவகங்கை பகுதியில் கல்லூரிகள் தொடங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தோம்.
இதை தொடர்ந்து தருமபுரியில் மருத்துவ கல்லூரி கடந்த ஆண்டு துவக்கப்பட்டது. தற்போது 2வது படிப்புகளுக்கான ஏற்பாடுகள் விரைவாக நடந்து வருகிறது.
மீதமுள்ள நான்கு மாவட்டங்களிலும் இந்த கல்வியாண்டில் மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளது.
தற்போது தமிழகத்தில் அரசின் கட்டுப்பாட்டில் 15 மருத்துவக் கல்லூரிகள், ஒரு பல் மருத்துவக் கல்லூரி, 2 பிசியோதெரபி கல்லூரிகள், 2 செவிலியர் கல்லூரிகள் மற்றும் 21 செவிலியர் பயிற்சி கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
அதேபோல் தமிழகத்தில் மருத்துவ துறையில் தனியாரையும் சிறப்பாக ஊக்குவித்து வருகிறோம். தனியார் வசம் தற்போது 4 சுய நிதி மருத்துவக் கல்லூரிகள், 17 சுய நிதி பல் மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. தற்போது 5வதாக கற்பக விநாயக மருத்துவக் கல்லூரி சேர்ந்துள்ளது என்றார் ஸ்டாலின்.
500 டாக்டர்கள் நியமனம்...
இதற்கிடையே வேலூர் மாவட்டம் வாலஜாபேட்டை மாவட்ட தலைமை மருத்துவமனை ரூ. 3.07 கோடி செலவில் 100 படுக்கை வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதன் துவக்க விழாவி்ல் பேசிய சுகாதார துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்,
அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற புதிதாக 500 மருத்துவர்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். இதற்கான கவுன்சிலிங் வரும் 21, 22 மற்றும் 23ம் தேதிகளில் நடக்கும் என்றார்.