ஸ்வைன் தடுப்பு-சிறப்பாக செயல்படும் தமிழகம்
கோவை: பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளிலும், கட்டுப்படுத்துவதிலும் நாட்டிலேயே தமிழக்தான் சிறப்பாக செயல்பட்டு வருவதா மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் காந்தி செல்வன் கூறியுள்ளார்.
கோவையில் மருத்துவமனை தொடக்க விழா ஒன்றில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், முதல்வர் கருணாநிதி பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைளை மிகச் சிறப்பாக செய்து வருகிறார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை முறைகளும் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளன. எனவே பன்றிக் காய்ச்சல் பரவல் தமிழகத்தில் வெகுவாக தடுக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ள இந்த நோயின் பரவலைத் தடுக்க மத்திய அரசும் பல்வறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
நமது நாட்டுக்கு ஏராளமான டாக்டர்களும், மருத்துவக் கல்லூரிகளும் தேவை. இதற்காக மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கும் விதிமுறைகளைத் தளர்த்த வேண்டியது அவசியம்.
நமது நாட்டில் சர்வதேச தரத்திலான மருத்துவ சேவை கிடைக்கிறது. இளைஞர்கள் மருத்துவத் துறையில் சாதனைகளைப் படைக்க முன்வர வேண்டும் என்றார் அவர்.