களக்காடு-ஊருக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்
நெல்லை: நெல்லை அருகே காளக்காடு பகுதியில் ஊருக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருவதால் கிராம மக்கள் இரவு நேரங்களில் பீதி காரணமாக தூங்கமுடியாமல் தவித்து வருகின்றனர்.
களக்காடு புலிகள் காப்பாகத்துக்கு அருகில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் தலையணை நுழைவு வாயில் பகுதியில் சிவபுரம், கள்ளியாறு, சிவல்விளை உள்ளிட்ட கிராமங்கள் இருக்கின்றன.
இந்த கிராமங்களில கடந்த ஒரு மாதமாக காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருகின்றன.
நேற்று முன்தினம் இரவு சிவபுரம் பகுதியில் காட்டு யானைகள் புகுந்தது. பின்னர் அவை களக்காடு புதுதெருவை சேர்ந்த சுரேஷ் என்ற விவசாயிக்கு சொந்தமான 2 பனை மரங்களை சாய்த்து அட்டகாசம் செய்தது.
பின்னர் அதிகாலை 4 மணி அளவில் வீடுகளுக்கு அருகில் வந்து பிளிறி சென்றன. இந்த சம்பவங்களால் பொதுமக்கள் இரவு நேரங்களில் தூக்க முடியாமல், அச்சத்தில் தவித்து வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி குட்டியானை பலி...
இந்நிலையில் முண்டந்துறை புலிகள் காப்பாகம் அருகே மாஞ்சோலை கோயில் திட்டை என்ற பகுதியில் குட்டி யானை ஒன்று இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து புலிகள் காப்பக துணை இயக்குனர்கள் வெங்கடேஷ், பத்ரசாமி, மற்றும் வன ஊழியர்கள் அங்கு சென்று பார்வையிட்டனர்.
அப்போது அங்கு 5 வயதுடைய ஆண் யானை ஒன்று இறந்து கிடந்தது. உணவு தேடி வந்தபோது மின்சார கம்பத்தில் துதிக்கை பட்டு இறந்ததாக தெரிகிறது.
இறந்து மூன்று நாட்கள் ஆகிவிட்டதால் அழுகிய நிலையில் காணப்பட்டது. யானையின துதிக்கை கருகி காணப்பட்டது. அம்பை கால்நடை மருத்துவர் கணேஷ் யானையின் உடலை பரிசோதித்தார். பின்னர் அதே இடத்திலேயே யானையின் உடல் எரிக்கப்பட்டது.