தமிழகத்தில் மீண்டும் ஒரு வெயில் காலம்-ஏன்?
இப்படி சீசன் அல்லாத சமயத்தில் வெயில் அதிகமாக இருக்கக் காரணம், தரைக்காற்று அதிக அளவில் வீசுவதே காரணம் என்று கூறுகிறது வானிலை ஆய்வு மையம்.
கிட்டத்தட்ட அக்னி நட்சத்திர வெயில் போல உள்ளது தற்போது தமிழகத்தில் கொளுத்திக் கொண்டிருக்கும் வெயில். காலை 5.30 மணிக்கே பளீரன வெளிச்சம் வந்து விடுகிறது. 7 மணிக்கெல்லாம் சூடான வெயில் தமிழக மக்களை வரவேற்கிறது.
அதன் பிறகு அதிகரிக்கும் வெயில் மாலை 5 மணிக்குத்தான் சற்று ஓய்கிறது. சராசரியாக 100 டிகிரி அளவுக்கு வெயில் உள்ளது.
கோடை காலத்தில்தான் இப்படி வெயில் அடிக்கும். அதிலும் அக்னி நட்சத்திர காலத்தில்தான் மண்டையைப் பிளக்கும் அளவுக்கு வெயில் இருக்கும். ஆனால் இது பருவ மழை காலம். இப்போதும் இந்த அடி அடிக்கிறதே என்று மக்கள் பெரும் குழப்பமடைந்துள்ளனர்.
காலை முதல் மாலை மக்கள் வெளியில் நடமாடவே அஞ்சும் நிலைமை. இரவாகி விட்டால் புழுக்கன் பின்னிப் பெடலெடுத்து விடுகிறது.
ஏன் இப்படி ஒரு கொடும் வெயில், இந்த பருவ மழைக் காலத்தில் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணனிடம் கேட்டால், தென்மேற்கு பருவமழை பெய்தால், மழை மேகக் கூட்டம் தமிழகத்திற்கு அடிக்கடி வரும்.
அது போன்ற சமயத்தில் வெயிலின் தாக்கம் சற்று குறையும். ஆனால் தற்போது பருவ மழை பொய்த்து விட்டது. இதனால் கடல் காற்று உள்ளே வரவில்லை. மேலும், தரைக்காற்றும் அதிக அளவில் வீசுகிறது. இதனால் வறண்ட நிலை அதிகரித்து கடும் வெப்பமாக உள்ளது. அதுதான் இப்போது வெயில் சுட்டெரிப்பதற்குக் காரணம் என்கிறார்.
இன்னும் 150 ஆண்டுகளில் வட கிழக்குப் பருவ மழையை இந்தியா மறந்து விட வேண்டி வரும் என ஏற்கனவே நிபுணர்கள் பீதியைக் கிளப்பியுள்ளனர். ஆனால் இப்போது அடித்துக் கொண்டிருக்கும் வெயிலைப் பார்த்தால் அதற்கு முன்பாகவே நிலைமை அலங்கோலமாகி விடுமோ என்ற பீதிதான் ஏற்படுகிறது.
மழைக்காக குடையைப் பிடித்துக் கொண்ட போக வேண்டிய நேரத்தில், மக்கள் வெயிலிலிருந்து தப்ப குடையுடன் போவதைப் பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறது.