அறிஞர் அண்ணாவின் 101வது பிறந்த நாள்-தமிழகத்தில் கோலாகலம்
தமிழகம் முழுவதும் உள்ள அண்ணா சிலைகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் பல பகுதிகளிலும் அண்ணாவின் படங்கள் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்ட வருகிறது.
சென்னை வள்ளுவர் கோட்டம் முன் உள்ள அண்ணா சிலைக்கு முதல்வர் கருணாநிதி இன்று காலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சிலை அருகே நடந்து சென்ற கருணாநிதி அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா படத்துக்கு மலர் தூவினார். வள்ளுவர் கோட்ட பூங்காவில் கருணாநிதி மரக் கன்றும் நட்டார்.
அப்போது முதல்வரிடம் நிருபர்கள், அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில் உங்கள் செய்தி என்ன என்று கேட்டதற்கு,
பேரறிஞர் அண்ணாவின் லட்சியங்களையும், கொள்கைகளையும் உணர்ந்து கடைப்பிடித்து தமிழ்நாட்டு மக்கள் எல்லா உரிமைகளோடு வாழ்வதற்கும், அண்ணா அவர்கள் நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் தொடர்ந்து எடுத்துரைத்த மாநில சுயாட்சிக் கொள்கை வலுப்பெறுவதற்கும் குரல் கொடுப்போம்.
இதற்கு அனைத்துக் கட்சிகளும் வேறுபாடுகளையும், மாறுபாடுகளையும் களைந்து, இணைந்து குரல் தர வேண்டம்.
நாட்டில் சமத்துவம், சமதர்மம், சகோதரத்துவத்தைப் பேணிக்காக்க இந்த தினத்தில் சூளுரை மேற்கொள்வோம் என்றார்.
அண்ணா உருவ 5 ரூபாய் நாணயம்:
இன்று சென்னை பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடக்கும் விழாவில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, அண்ணா உருவம் பொறித்த 5 ரூபாய் நாணயத்தை வெளியிடவுள்ளார்.
இந்த விழாவில் அண்ணாவின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் anna100.tn.gov.in என்ற இணையத் தளத்தை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அண்ணா குறித்து முதல்வர் கருணாநிதி பேசிய உரையை, இன்று காலை சென்னை வானொலி, புதுச்சேரி வானொலிகள் ஒலிபரப்பின.
மேலும் பொதிகை தொலைக்காட்சியில் அவரது உரை ஒளிபரப்பானது. இரவு 8.45 மணிக்கும் இந்த உரை ஒளிபரப்பாகும்.
அண்ணா உருவம் பொறித்த பெட்ஷீட்:
அண்ணாவின் நூற்றாண்டு விழாவையொட்டி, ஜாக்காடு தறியில் புதுவித தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அண்ணா, முத்லவர் கருணாநிதி ஆகியோரின் உருவம் பொறித்த, பெட்ஷீட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
சென்னிமலை சென்டெக்ஸ் நிறுவனம் இதை அறிமுகம் செய்துள்ளது.
ஆவி்ன்-புதிய ஸ்வீட்ஸ்:
அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவினையொட்டி ஆவின் நிறுவனத்தில் பணிபுரியும் சிறப்பு நிலை மற்றும் தேர்வுநிலை முதுநிலை விற்பனை உதவியாளர்கள் 11 பேருக்கு பரிசோதனை கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான ஆணையை துணை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
மேலும் ஆவீன் நிறுவனத்தின் புதிய இனிப்பு வகைகளையும் அறிமுகப்படுத்தினார்.