ப.சி.-விழுந்து விழுந்து வேலை செய்யும் கராத்தே
சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் பிறந்த நாள் விழாவை தமிழகத்தில் திருவிழா போல் மூன்று நாள் கொண்டாட கராத்தே தியாகராஜன் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்து வருகிறார்.
இதையடுத்து தான் தற்போது ப.சிதம்பரம் கோஷ்டிக்கு மாறியிருப்பதை தெளிவாக்கியிருக்கிறார்.
தமிழக காங்கிரஸில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட அங்கிருக்கும் கோஷ்டிகளின் எண்ணிக்கை அதிகம்.
இந்நிலையில் முன்னாள் சென்னை மேயரான கராத்தே தியாகராஜன், இப்போது சிதம்பரம் கோஷ்டியில் ஐக்கியமாகியுள்ளார்.
அவரது பிறந்தநாள் விழாவுக்காக விழுந்து விழுந்து வேலை பார்த்து வருகிறார்.
அவரது ஏற்பாட்டின் கீழ் சிதம்பரம் பிறந்தநாள் விழா இன்று மாலை 6.30 மணிக்கு சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோவிலில் தங்கதேர் இழுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம், சட்டசபை காங்கிரஸ் துணை தலைவர் யசோதா ஆகியோர் கலந்து கொள்கின்றனர். 155வது வட்ட கவுன்சிலர் சாந்தி தலைமை தாங்குகிறார்.
பிறந்தநாளான நாளை 16.09.2009 அன்று காலை 9 மணிக்கு திருவான்மியூர் கோவில் குளம் அருகில் ஏழை மக்களுக்கு இலவச வேஷ்டி, சேலைகள் கொடுக்கப்படுகிறது. காக்கும் கரங்கள் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, யசோதா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
அடையாறு புற்றுநோய் மருத்துவமனை நோயாளிகளுக்கு பழம், ரொட்டி வழங்கப்படுகிறது. எழும்பூர், புரசைவாக்கத்தில் ஆயிரம் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இலவச மருத்துவ முகாம், மாணவ மாணவியர்களுக்கு இலவச சீருடை, நோட்டு புத்தகம் போன்றவை கொடுக்கப்படுகிறது.
மேலும், நாளை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், புதூர் பெரிய பாளையத்தம்மன் கோவில், தேனாம்பேட்டை ஆலையம்மன் கோவில், அசோக் நகர் தேவி கருமாரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.
இரவு 7 மணிக்கு வடபழனி முருகன் கோவிலில் தங்கதேர் இழுக்கும் பணி நடக்கிறது. இதில் கராத்தே தியாகராஜன், யசோதா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
பின்னர் 17ம் தேதி காலை மயிலாப்பூர் முன்டகக் கண்ணியம்மன் கோவிலில் மயிலை ரவி தலைமையில் தங்கத் தேர் இழுக்கப்படுகிறது.