காதலன் ஏமாற்றியதால் நீதிமன்றத்தில் ஆசிட் குடித்த பெண்
விருத்தாசலம்: விருத்தாசலம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த ஒரு பெண் ஒருவர் ஆசிட்டை குடித்து மயங்கி விழுந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பெண்ணின் பெயர் ஜெயமணி(30). கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த குமாரமங்கலம் காலனியைச் சேர்ந்தவர் ராமசாமி என்பவரின் மகள்.
இந்த பெண்ணும் சின்னாத்துகுறிச்சியைச் சேர்ந்த சாமிதுரை மகன் கார்மேகம் என்பவரும் கடந்த பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இந்நிலையி்ல் ஜெபமணி, கார்மேகம் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுப்பதாக கடந்த 2007ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதையடுத்து போலீஸார் கார்மேகத்தை கைது செய்தனர். இது தொடர்பாக தற்போது வழக்கு விருத்தாச்சலம் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில் வழக்கு விசாரணைக்கு நீதிமன்றம் வந்த ஜெபமணி இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் போராடியும் காதலன் தன்னை ஏற்றுக்கொள்ளாததால் மனமுடைந்து ஆசிட் குடித்தார்.
அவர் நீதிபதி அறைக்கு வெளியே உள்ள வராண்டாவில் உட்கார்ந்திந்த போது திடீரென வாயில் நுரை தள்ளியபடியே மயங்கி விழுந்தார்.
இதை பார்த்த நீதிமன்ற ஊழியர்கள், போலீஸார்கள் ஜெயமணியை விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் அவர் ஆசிட் குடித்திருப்பதை உறுதி செய்தனர்.
இதையடுத்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக அவரை கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.