பெண் மீது வாலிபர் துப்பாக்கி சூடு
வேலூர்: வேலூரில் தனது ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை துப்பாக்கியால் சுட்ட வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தற்போது கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அந்த பெண்ணின் பெயர் உஷா (19). இவர் வேலூர் மாவட்டம் ஜமுனாமரத்தூர் பெருங்காட்டூர் கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை என்பவரின் மகள்.
இவர் மீது அதே பகுதியை சேர்ந்த ராஜ் என்பவரின் மகன் தாமோதரன் பல நாட்களாக காதல் கொண்டு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு வீட்டில் தனியாக இருந்த உஷாவிடம் அவர் வம்பு செய்துள்ளார். தனது இச்சைக்கு இணங்கும்படி அவரை வற்புறுத்தியுள்ளார்.
ஆனால், அந்த பெண் அதற்கு மறுத்துவிட்டார். மேலும், சத்தம் போட்டு அருகிலிருப்பவர்களை அழைத்துவிடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதையடுத்து ஆத்திரமடைந்த அந்த வாலிபர் கையில் மறைத்து வைத்திருந்த காட்டு விலங்குகளை வோட்டையாட பயன்படுத்தப்படும் நாட்டு துப்பாக்கியை எடுத்து, அந்த பெண்ணை நோக்கி தாறுமாறாக சுட்டுள்ளார். அந்த பெண்ணுக்கு உடலில் பல இடங்களில் குண்டு பாய்ந்து, வேதனையால் அலறி துடித்துள்ளார்.
அவரது அலறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அந்த பெண்ணை வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் வேலூர் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
தகவல் அறிந்த போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவான தாமோதரனை தேடி வருகின்றனர்.