அஞ்சலகம் மூலம் உலகில் எந்த இடத்துக்கும் பணம் அனுப்பலாம்!
சென்னை: உலகில் எந்த இடத்தில் இருந்தும் ஒரு மணி நேரத்தில் இந்தியாவுக்கு பணம் அனுப்பும் புதிய வசதியை இந்திய அஞ்சல்துறை சென்னையில் அடுத்தமாதம் அறிமுகப்படுத்துகிறது.
மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ ராசா இதைத் தெரிவித்தார்.
பொதுமக்களுக்கு தபால் சேவையை விரைவாக வழங்கும் பொருட்டு, தற்போது சென்னையிலிருந்து மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூர் ஆகிய நகரங்களுக்கு தபால் சரக்குகளை விமானத்தில் எடுத்துச்செல்லும் புதிய சேவையை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய விமான சேவையின் தொடக்கவிழா சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையம் அருகேயுள்ள தானியங்கி அஞ்சல் பிரிப்பு மையத்தில் நடந்தது. விழாவுக்கு அஞ்சல் துறைச் செயலாளர் ராதிகா துரைசாமி தலைமை தாங்கினார். இதில் மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி ஆ.ராசா கலந்துகொண்டு விமான சேவையை தொடங்கி வைத்தார்.
விழாவில் அவர் கூறியதாவது:
தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ள விமான சேவை மூலம் பொதுமக்களுக்கு விரைவான தபால் சேவை கிடைக்கும். காலதாமதம் தவிர்க்கப்பட்டு சரியான நேரத்தில் தபால்கள், பார்சல்கள் மற்றும் இதர பொருட்கள் சென்றடையும். சீக்கிரம் அழுகும் தன்மை கொண்ட பொருட்களையும் இதன்மூலம் விரைவில் கொண்டு செல்ல முடியும்.
தானியங்கி அஞ்சல் பிரிப்பு மையங்கள் ஏற்கனவே சென்னை மற்றும் மும்பையில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இவை புதிய தொழில்நுட்ப வசதியுடன் இன்னும் மேம்படுத்தப்படும். சென்னை, மும்பையைத் தொடர்ந்து டெல்லி மற்றும் கொல்கத்தாவில் இதுபோன்ற தானியங்கி அஞ்சல் பிரிப்புமையங்கள் ரூ.65 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளன.
ஜஸ்ட் ஒரு மணி நேரம் போதும்...
தபால் அலுவலகங்கள் மூலமாக உலகில் எந்த இடத்திற்கும் ஒரு மணி நேரத்திற்குள் பணத்தை அனுப்ப உதவும் மின்னணு பணபரிமாற்ற வசதி சென்னையில் அடுத்த மாதம் (அக்டோபர்) அறிமுகப்படுத்தப்படும். இதற்கான ஆரம்பகட்ட பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டன. எனவே, வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இங்குள்ள தங்கள் உறவினர்களுக்கு தபால் அலுவலகம் மூலமாக விரைவாக பணத்தை அனுப்பலாம், என்றார் ராசா.
மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி சச்சின் பைலட், ஏர் இந்தியா நிறுவன இயக்குனர் (பணியாளர் பிரிவு) அனூப்ஸ்ரீ வத்சவா உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.