எம்ஜிஆர் சிலை-வேலூரில் திமுக, அதிமுக மோதல்
வேலூர்: வேலூர் அருகே அண்ணா நூற்றாண்டு விழாவுக்காக திமுகவினர் வைத்திருந்த டிஜிட்டல் பேனர் அருகிலிருந்த எம்ஜிஆர் சிலையை மறைத்ததை அடுத்து திமுக மற்றும் அதிமுகவினர் மோதி கொண்டனர்.
இந்த சம்பவம் வேலூர் சத்துவாச்சாரி ஆர்டிஓ ரோட்டு நுழைவுவாயில் பகுதியில் நடந்தது. அங்கு நேற்று திமுகவினர் அண்ணா நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை திமுகவினர் வெகு விமர்சிகையாக கொண்டாடினர்.
அப்போது திமுகவினரின் டிஜிட்டல் பேனர் ஒன்று அப்பகுதியில் இருந்து எம்ஜிஆர் சிலையை மறைக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்தது. இதை அறிந்த அதிமுகவினர் அப்பகுதியில திரண்டனர்.
அவர்கள் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க வந்த திமுக நகர செயலாளர் சக்கரபாணி தலைமையிலான திமுகவினரிடம் டிஜிட்டல் பேனர்களை நீக்குமாறு கூறி வாக்குவாதம் செய்தனர்.
இந்நிலையில் இருதரப்பினருக்கு இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.
தகவல் அறிந்த சத்துவாச்சாரி இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் இருதரப்பினரையும் விலக்கிவிட்டனர். மேலும், அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.