ஜெ வாங்கிய விமானம்-அரசுக்கு இழப்பு ரூ17 கோடி
உத்தரபிரதேச முதல்வர் மாயாவதி சுற்றுப்பயணத்துக்காக ஐந்து விமானங்களை, மூன்று ஹெலிகாப்டர்களை வாங்கியுள்ளார். தமிழகத்தில் முதல்வர், விஐபிக்களின் பயன்பாட்டுக்காக செஸ்னா ரக விமானமும் மற்றும் பெல் ரக ஹெலிகாப்டர் ஒன்றும் உள்ளன.
இதில் செஸ்னா விமானம் கடந்த 1995ல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது வாங்கப்பட்டது. அடுத்து ஆட்சிக்கு வந்த தமிழக முதல்வர் கருணாநிதி இந்த பணத்தில் நூற்றுக்கணக்கான ஆம்புலன்ஸ்களை வாங்கி மக்களுக்கு பயன்படுத்தியிருக்கலாம் என்று கருத்து தெரிவித்திருந்தார்.
மேலும் அந்த செஸ்னா விமானம், ஹெலிகாப்டரை பயன்படுத்துவதையும் கருணாநிதி தவிர்த்து வருகிறார்.
முதல்வர் கருணாநிதி தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்யும்போது ரயில், காரில் தான் செல்வார்.
தமிழக ஆளுனர் சுர்ஜித் சிங் பர்னாலா தான் இதை எப்போதாவது பயன்படுத்தி வருகிறார்.
கடந்த 6 ஆண்டுகளில் செஸ்னா விமானம் 438.1 மணி நேரம் தான் பறந்துள்ளது. அதாவது ஒரு மாதத்துக்கு சுமார் 6 மணி நேரம் பறந்துள்ளது.
9 பேர் உட்கார்ந்து பயணம் செய்யும் வசதி கொண்ட ஹெலிகாப்டர் இந்த ஆண்டும், 2007ம் ஆண்டும் ஒரு முறை கூட பயன்படுத்தப்படவில்லை. சோதனைக்காக மட்டுமே 10 முறை இயக்கப்பட்டுள்ளது.
ஆனால், விமான போக்குவரத்து விதிகளின்படி ஒரு விமானத்தை ஒரு மாத காலத்தில் குறைந்தபட்சம் 5 மணி நேரமாவது இயக்க வேண்டுமாம்.
இது குறித்து முன்னாள் விமானியும், விமான பாதுகாப்பு நிபுணருமான கேப்டன் மோகன் ரங்கநாதன் கூறுகையில்,
ஹெலிகாப்டர்களை தொடர்ந்து பயன்படுத்தி வர வேண்டும். ஒரு மாதத்துக்கு 100 மணி நேரமாவது இயக்க வேண்டும். அப்படியில்லாத சமயத்தில் அரசு ஹெலிகாப்டரை சொந்தமாக வைத்திருப்பதை விட வாடகைக்கு எடுப்பதே சிறந்தது. அதே போல விமானங்கள் சும்மா நின்றாலும் பராமரிப்பு செலவுகள் மிக அதிகம் என்றார்.