டெல்லி இலங்கை தூதரகம் முன் காவிக்கொடி பேரணி!
திருப்பூர்: மத்திய அரசின் மோசமான வெளியுறவு கொள்கையால் தமிழர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை கண்டித்து டெல்லியில் இலங்கை தூதரகம் முன்பு வரும் 21ம் தேதி காவிக்கொடி பேரணி நடத்தப்படும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் திருப்பூரில் நிருபர்களிடம் கூறுகையில்,
இலங்கையில் கடந்த 40 ஆண்டுகளாக லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தற்போதும் சொந்த நாட்டில் அகதிகளாக அவதிப்படுகின்றனர்.
இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையில் இலங்கை ஈடுபட்டு வருகிறது. சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு ராணுவ தளங்கள் அமைக்க அனுமதி வழங்கியுள்ளது. இதனால் இந்தியாவுக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால், மத்திய அரசோ இலங்கைக்கு சாதகமாகவே செயல்படுகிறது. ஆஸ்திரேலியா, மலேசியா, மாலத்தீவு என பெரும்பாலான நாடுகளில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை.
மத்திய அரசின் இந்த மோசமான பாதுகாப்பு கொள்கையை கண்டித்து வரும் 21ம் தேதி டெல்லியில் உள்ள இலங்கை தூதரகம் முன் காவிக்கொடி பேரணி நடக்கிறது.
இதில் இந்தியா முழுவதும் உள்ள 22 இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர் என்றார்.