சொத்து குவிப்பு புகார்-தினகரனுக்கு உச்சநீதிமன்ற நீதிபதி பதவி தர கடும் எதிர்ப்பு
டெல்லி: கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள தமிழகத்தைச் சேர்ந்த பி.டி. தினகரன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும் அவரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கக் கூடாது என்றும் இந்திய வழக்கறிஞர் சங்கம் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.5 உயர் நீதிமன்ற நீதிபதிகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு (collegium ) பரிந்துரைத்துள்ளது. அதில் பி.டி. தினகரனின் பெயரும் ஒன்று.
தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனை தலைமையாகக் கொண்ட இந்தக் குழுவில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளான அகர்பாவ், கபாடியா, தருண் சாட்டர்ஜி, அல்தமஸ் கபீர் ஆகியோர் இடம் பெறுள்ளனர்.
இந்தக் குழுவின் பரிந்துரையின்பேரில் 5 பேருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு அளிக்கும் பரிந்துரை தற்போது மத்திய சட்ட அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளது. சட்டத்துறை பரிசீலனைக்குப் பின் பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அது அனுப்பப்படும்.
இந் நிலையில் தமிழகத்தைச் சேர்ந்தவரான நீதிபதி தினகரனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மூத்த வழக்கறிஞர்கள் சாந்திபூஷண், பாலி நாரிமன், அசோக் தேசாய், ராம் ஜேட்மலானி ஆகியோரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
அவர் தனது வருமானத்துக்கு அதிகமாக தமிழகத்தில் ஏராளமான நிலங்களை வாங்கிப் போட்டுள்ளதாக இந்த வழக்கறஞர்கள் புகார் கூறியுள்ளனர். அவர் மீது ஏராளமான ஊழல் புகார்கள் உள்ளதாக சென்னை வழக்கறிஞர்கள் சங்கம் (Chennai Bar Council) கூறியுள்ளதை அடிப்படையாக வைத்து இந்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரையடுத்து கடந்த வாரம் அவரை டெல்லிக்கு அழைத்து நேரில் விசாரணை நடத்தினார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன்.
நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் இல்லத்தில் நடந்த இந்த விசாரணையின்போது உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் சிலரும் உடனிருந்தனர்.
அப்போது தன் மீதான குற்றச்சாட்டுகளை நீதிபதி தினகரன் திட்டவட்டமாக மறுத்தார். உரிய விளக்கமும் அளித்தார். தனது சொத்துக்களின் பட்டியலையும், வங்கிக் கணக்குகளையும் தலைமை நீதிபதியிடம் சமர்பித்த தினகரன், தனக்கு தமிழகத்தில் 48 ஏக்கர் நிலம் இருப்பதாகவும், ஆனால் அதை நீதிபதியான பின்னர் தனது சொத்துப் பட்டியலில் சேர்க்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
இந் நிலையில் தினகரனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கக் கூடாது என்று வலியுறுத்தி ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கும் மூத்த வழக்கறிஞர்கள் கடிதம் எழுதியுள்ளனர். மேலும் தினகரன் மீது கூறப்பட்டுள்ள புகார்கள் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
தலித் என்பதால் ஆதரிக்கிறார்.. பூஷன்:
இந் நிலையில் மரபுகளை மீறிப் பேச ஆரம்பித்துள்ளார் சாந்திபூஷண். அவர் கூறுகையில், தன்னைப் போலவே தினகரனும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் மீது தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கு 'சாப்ட் கார்னர்' உள்ளது. அவர் நில உச்சவரம்பு சட்டத்தை மீறி நிலங்கள் வாங்கிப் போட்டுள்ளதாக சென்னை வழக்கறிஞர்கள் சங்கம் புகார் தந்தும் அதை உரிய முறையில் விசாரிக்கவில்லை என்றார்.
இதற்கிடையே தினகரனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக்கக் கூடாது என்று கூறி இந்த வழக்கறிஞர்கள், ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கடிதம் அனுப்பியுள்ளனர்.
இந் நிலையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கமும் தினகரன நியமனத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
ஆனால், தினகரன் தலித் என்பதால் ஒரு குறிப்பிட்ட பிரிவினரால் அவர் குறி வைக்கப்படுவதாக அவரது தரப்பு கருதுகிறது.