போர்க்களமாக மாறிய மெரீனா-50க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு தீவைப்பு
இந்த சம்பவத்தில் தொடர்புடைய 50 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கலங்கரை விளக்கம் முதல் அண்ணா சதுக்கம் வரையிலான பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மெரீனா கடற்கரையில் ஐஸ்ஹவுஸ்க்கு அருகில் அயோத்திகுப்பம் உள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி எடுத்ததது. இதன் காரணமாக இரவு நேரத்தில் அயோத்திகுப்பத்தை சேர்ந்த சிலர் மெரீனாவில் சென்று தூங்கி வருகி்ன்றனர்.
இந் நிலையில் நேற்று இரவு சுமார் 11.45 மணிக்கு அயோத்திகுப்பம் ஊர்த்தலைவர் ஜெயபால் உள்ளிட்ட சிலர் போர்வை, தலையணை சகிதமாக மெரீனாவுக்கு சென்றுள்ளனர்.
அவர்கள் கடற்கரை சாலையை கடக்க முயன்றனர். அப்போது இரவு தொழுகையை முடித்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் அந்த பக்கமாக பைக்கில் வந்தனர்.
அவர்களில் இளைஞர் ஒருவரின் பைக் ஜெயபால் மீது மோதிவிட்டது. இதையடுத்து அயோத்தி குப்பத்தை சேர்ந்தவர்களுக்கும், பைக்கில் வந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த அயோத்தி குப்பத்தினர், பைக்கில் வந்தவர்களை அடித்துள்ளனர்.
இதையடுத்து பைக்கில் வந்தவரின் ஆதரவாளர்கள் சிலர் மெரீனா கடற்கரை மேம்பாட்டு பணிக்காக போடப்பட்டிருந்த கற்களை எடுத்து அயோத்தி குப்பத்தினர் வீசினர். அயோத்தி குப்பத்தினரும் பதிலுக்கு கல்வீச்சில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் பைக்கில் வந்தவர்களின் ஆதரவாளர்கள் சிலர் அயோத்தி குப்பத்துக்குள் புகுந்து அங்குள்ள செங்கழு நீரம்மன் கோவில் கோபுரகலசத்தை கல்வீசி உடைத்தனர். கோவில் மின் விளக்குகளும் அடித்து நொறுக்கப்பட்டன.
கோவில் தாக்கப்பட்டதால் கோபமடைந்த அயோத்தி குப்ப மக்கள் அந்த வாலிபர்களை சுற்றி வளைந்து பிடித்து தாக்கினார்கள். இதில் இருவர் காயமடைந்தனர். மற்றவர்கள் பைக்கை போட்டுவிட்டு ஓட்டம் பிடித்துவிட்டனர்.
அந்த பைக்குகளுக்கு அயோத்தி குப்பத்தினர் தீ வைத்து கொளுத்தினர். இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட பைக்குகள் சேதமடைந்தன. மேலும் அரசு பஸ் மற்றும் கார் ஒன்றும் சேதமடைந்தது.
இந்த மோதலால் நள்ளிரவில் அண்ணா சதுக்கம் முதல் கலங்கரை விளக்கம் வரையிலான பகுதி முழுவதும் போர்க்களம் போல் காட்சியளித்தது. சாலை முழுவதும் கற்கள், எரிந்து போன பைக், கண்ணாடி துண்டுகள் சிதறிக் கிடந்தன.
தகவல் அறிந்த போலீஸார், தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அத்தனர். மேலும் காலையில் போக்குவரத்து பாதிக்கப்படும் என்பதால் விடிவதற்குள் அனைத்தையும் அப்புறப்படுத்தி சாலையை சீராக்கினர்.
ஆனால், இன்றும் அப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.