இலவச வேட்டி சேலை தயாரிப்பு மும்முரம்!
ஈரோடு: பொங்கல் பண்டிகைக்காக ரூ. 256 கோடி செலவில் இலவச வேட்டி, சேலை தயாரிக்கும் பணிகள் மும்முராக நடப்பதாக தமிழக கைத்தறித் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் நடைபெறும் இலவச வேட்டி, சேலை உற்பத்தி செய்யும் பணியை, தமிழக கைத்தறித்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
காஞ்சிபுரம், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, ஈரோடு, வேலூர், திருவள்ளூர் பகுதிகளில் 221 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வேட்டி, சேலை தயார் செய்யப்படுகின்றன.
விசைத்தறியில் சேலைகள், வேட்டிகள் தயாரிக்கும் பணியை, கோவை, ஈரோடு, திருச்செங்கோடு, சேலம், மதுரை மற்றும் திருவள்ளூரைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மேற்கொண்டுள்ளன.
இதற்காக தமிழக அரசு ரூ. 256 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. நவம்பர் 30ம் தேதிக்குள் வேட்டி, சேலை உற்பத்தி செய்யப்படும். அவை டிசம்பர் 15 ம் தேதிக்குள் அனைத்து மாவட்டத்துக்கும் அனுப்பி வைக்கப்படும்.
ஜனவரி 1ம் தேதி இந்த திட்டத்தை சென்னையில் தமிழக முதல்வர் கருணாநிதி துவக்கி வைப்பார்.
காஞ்சிபுரம் பட்டு, மதுரை சுங்கடி சேலைக்கு காப்புரிமை...
காஞ்சிபுரம் பட்டு, மதுரை சுங்கடி, சேலம் வேட்டி, ஆரணி சில்க்ஸ், பவானி ஜமுக்காளம், சின்னாளப்பட்டி சேலை போன்றவற்றிக்கு உற்பத்தி இட அடையாள காப்புரிமை கேட்டு பதிவு செய்துள்ளோம் என்றார்.