மீனவர்கள் மீது தாக்குதல் நடக்காது - மத்திய அரசு உறுதியளிக்க தா.பாண்டியன் கோரிக்கை
சென்னை: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவதை அனுமதிக்கமாட்டோம் என மத்திய அரசு உறுதி அளிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை,
கச்சத்தீவுக்கு அருகில் மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழக மீனவர்கள் மீது இது போன்ற தாக்குதல் தொடர்ந்து வருகிறது.
மத்திய அரசு இலங்கை அரசுடன் பேசியதாகவும், அப்போது இது போன்று நடக்காது என அவர்கள் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால், தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுகிறது. உறுதிமொழிகள் மீறப்படுகிறது. மீனவர்கள் கொல்லப்படுவதும், தாக்குதலுக்கு ஆளாவதும் நிறுத்தப்படவில்லை.
தமிழக மீனவர்களுக்கு எதிரான இது போன்ற நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த மத்திய அரசு உறுதியான நடவடிக்கையை மேற்கொள்ள முன்வர வேண்டும்.
இனி இது போன்ற செயல்களை தொடர அனுமதிக்க மாட்டோம் என மத்திய அரசு உறுதியளிக்க வேண்டும்.
கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும், அவர்களுக்கு முறையான இழப்பீடு வழங்கவும் முன்வர வேண்டும் என அறிக்கையில் தா.பாண்டியன் கூறியுள்ளார்.