லஷ்கர் தலைவர் ஹபீஸ் சயீத்தின் நடமாட்டத்துக்கு கட்டுப்பாடு
லாகூர்: நாளுக்கு நாள் சயீத் மீது கடும் நடவடிக்கை எடுக்க அமெரிக்காவிடமிருந்து நெருக்குதல் அதிகரித்து வருவதால் முதலில் வழக்குப் பதிவு செய்த பாகிஸ்தான் அரசு தற்போது ஹபீஸ் சயீத்தின் நடமாட்டத்துக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
மும்பை தீவிரவாதத் தாக்குதலின் மூளையான சயீத்தின் நிழல் மீது நடவடிக்கை எடுக்கக் கூட பாகிஸ்தான் ரொம்பவே தயங்கி வருகிறது. இதனால் இந்தியா பொறுமை இழந்து வருகிறது. தனது புலம்பலை அமெரிக்காவிடம் இந்தியா ஆதாரங்களுடன் கொட்டித் தீர்த்துள்ளது.
இதையடுத்து பாகிஸ்தானை அமெரிக்கா நெருக்க ஆரம்பித்துள்ளது. இதனால் சமீபத்தில் சயீத் மீது 2 வழக்குகளைப் பதிவு செய்தது பாகிஸ்தான் அரசு.
இந்த நிலையில் தற்போது சயீத்தின் நடமாட்டத்திற்கு பல கட்டுப்பாடுகளை அது விதித்துள்ளது.
லாகூரின் ஜோஹர் டவுன் பகுதியில் உள்ள சயீத்தின் வீட்டுக்கு வெளியே ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அவர் ரம்ஜான் தொழுகைக்காக வெளியில் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் சயீத் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் மீடியா செய்தி வெளியிட்டு வருகிறது.
இருப்பினும் இதை அரசுத் தரப்பு உறுதிப்படுத்தவில்லை. போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், சயீத்தின் நடமாட்டத்திற்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. கடாபி ஸ்டேடியத்தில் நடைபெறும் ரம்ஜான் தொழுகையை தலைமையேற்று நடத்த அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.