அரசு பஸ் ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்
சென்னை: அரசு போக்குவரத்து ஊழியர்களின் தீபாவளி போனஸ் தொடர்பாக 25 தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் அமைச்சர் கே.என்.நேரு இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் இறுதியில் கடந்த ஆண்டைப் போலவே 20 சதவீத போனஸ் வழங்கப்படும் என கே.என்.நேரு அறிவித்தார்.
தமிழக அரசுக்கு சொந்தமான சுமார் 23 போக்குவரத்துக் கழகங்கள் தற்போது 7 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பணியாற்றும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் போனஸ் வழங்கப்படுவது வழக்கம்.
கடந்த ஆண்டு தொழிற்சங்கத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னர் 8.33 சதவீத போனசும், 11.67 சதவீதம் கருணைத் தொகையாகவும் சேர்த்து 20 சதவீதம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் தீபாவளி நெருங்கி வருவதால் இந்த ஆண்டுக்கான போனஸ் குறித்து முடிவு செய்வதற்காக தரமணியில் உள்ள சாலைப் போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அரசு தரப்பில் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு, போக்குவரத்துத் துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா மற்றும் போக்குவரத்துக்கழகங்களின் நிர்வாக இயக்குநர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் பிச்சப்பா, செயலாளர் சின்னசாமி எம்எல்ஏ, திமுக தொழிற்சங்க பேரவை சார்பில் செ.குப்புசாமி, சண்முகம் மற்றும் சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, தேமுதிக தொழிற்சங்கம், பாட்டாளி தொழிற்சங்கம், மறுமலர்ச்சி கழக தொழிற்சங்கம், சிறுத்தைகள் தொழிற்சங்க பிரிவு உள்பட 25 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தையின்போது ஊழியர்கள் தரப்பில் குறைந்தது 25 சதவீதம் முதல் அதிகபட்சம் 40 சதவீதம் வரை போனஸ் தருமாறு கோரப்பட்டது.
அனைத்துத் தொழிற்சங்கப் பிரதிநிதிகளின் கருத்துக்களையும் கேட்டறிந்த பின்னர் அமைச்சர் நேரு போனஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
அவர் கூறுகையில், 2007-08-ம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத்தொகையாக 20 சதவீதமும், அரசு முன்னரே அறிவித்தவாறு பண்டிகை முன்பணமாக ரூ.2 ஆயிரமும் வழங்கப்படும் என்றார்.
அதிமுக வெளிநடப்பு
முன்னதாக 40 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என அதிமுகவைச் சேர்ந்த அண்ணா தொழிற்சங்கப் பிரதிநிதிகள் வலியுறுத்தினர். அதை அரசுத் தரப்பு நிராகரித்ததால் அவர்கள் பேச்சுவார்த்தையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.