ரவுடி காரில் மோதி கொலை- பஞ். தலைவர் உள்பட 15 பேர் கைது
சென்னை: சென்னை அருகே திருநின்றவூரில் ரவுடி ஒருவரைக் காரை மோதிக் கொலை செய்த வழக்கில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர் உள்பட 15 பேர் கைது செய்யபப்ட்டனர்.
திருநின்றவூர் பஞ்சாயத்துத் தலைவராக இருப்பவர் விஸ்வநாதன். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். அந்த பஞ்சாயத்தில் கவுன்சிலராக இருப்பவர் திமுகவைச் சேர்ந்த ரவி.
பிரபல ரவுடி பார்த்திபன். இவரது தம்பி ஒரு அரசு கான்டிராக்டைப் பெறுவது தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பு கொல்லப்பட்டார். இதில் ரவிக்குத் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், செப்டம்பர் 16ம் தேதி பஞ்சாயத்துக் கூட்டத்தை முடித்து விட்டு விஸ்வநாதன், ரவி மற்றும் சிலர் கார்களில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது பார்த்திபன் தனது ஆட்களுடன் அவர்களை வழிமறித்து தகராறில் ஈடுபட்டார். இது மோதலாக மாறியது.
அப்போது ஒரு தரப்பு பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதலில் இறங்கியது. இதையடுத்து விஸ்வநாதன், ரவி குழுவினர் கார்களில் ஏறித் தப்ப முயன்றனர். அப்போது பார்த்திபனை அவர்கள் காரை ஏற்றிக் கொன்று விட்டுத் தப்பினர். மேலும் 2 பேர் காயமடைந்தனர்.
முகம் சிதைந்த நிலையில் பிணமாகக் கிடந்த பார்த்திபனை விட்டு விட்டு தப்பிச் சென்ற விஸ்வநாதன் குழுவினர், போலீஸில், தங்களை ரவுடிக் கும்பல் தாக்க வந்ததாக புகார் கொடுத்தனர்.
போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்தபோது அங்கு பார்த்திபன் பிணமாகக் கிடந்ததைப் பார்த்தனர். இதையடுத்து நடந்த விசாரணையில் விஸ்வநாதன் மற்றும் குழுவினர்தான் காரை ஏற்றி பார்த்திபனைக் கொன்றது தெரிய வந்தது. இதையடுத்து விஸ்வநாதன் உள்ளிட்ட 15 பேரும் கைது செய்யப்பட்டனர்.